tamilnadu

திருவண்ணாமலை, விழுப்புரம் முக்கிய செய்திகள்

திருவண்ணாமலையில் 19,89,432 வாக்காளர்கள்
திருவண்ணாமலை,டிச.3- தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப்பின் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.  இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் - 979457, பெண் - 1009880, இதரர் - 95 என மொத்தம் 1989432 ஆகும்.  இதில் உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சிகளில் ஆண் - 117519, பெண் - 126934, இதரர் - 14, என மொத்தம் 244467-ம், பேரூராட்சிகளில் ஆண் - 56711, பெண் - 61050, இதரர் - 3, என மொத்தம் 117764-ம், ஊராட்சிகளில் ஆண் - 805227, பெண் - 821896, இதரர் - 78, என மொத்தம் 1627201 வாக்காளர்களும் உள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் 123 நகராட்சி வார்டுகள், 150 பேரூராட்சி வார்டுகள், 34 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 341 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 6207 கிராம ஊராட்சி வார்டுகள், 860 கிராம ஊராட்சிகள், 4267 குக்கிராமங்கள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சிகளில் மற்றும் பேரூராட்சிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் விவரம் வரமாறு, வாக்குப்பதிவு கருவி ஒதுக்கீடு - 2100, இருப்பு - 2135, கட்டுப்பாட்டுக் கருவி ஒதுக்கீடு - 1200, இருப்பு - 1230 ஆகும். மேலும், ஊராட்சிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப் பெட்டிகள் விவரம், சிறிய கோத்ரஜ் பெட்டிகள் (300 வாக்குகள்) ஒதுக்கீடு - 6475, இருப்பு - 6434, டான்சி மீடியம் பெட்டிகள் (700 வாக்குகள்) ஒதுக்கீடு - 1633, இருப்பு - 1609, டான்சி ஸ்பெஷல் (1600 வாக்குகள்) ஒதுக்கீடு - 4126, இருப்பு - 4096 ஆகும்.

ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் 
விழுப்புரம்.டிச.3- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி மாதிரி நன்னடத்தை விதிகள் குறித்த அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் .அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.  கோவில், மசூதிகள், தேவாலயங்கள் பிற வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சார இடங்களாக பயன்படுத்தக்கூடாது. வாக்காளருக்கு எவ்வகையிலும் லஞ்சமோ, வெகுமதியோ கொடுத்தல் கூடாது. தேர்தல் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துதல் கூடாது. அச்சடிப்பவர்,வெளியீட்டாளர்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் சுவரொட்டியோ, கைப்பிரதி, துண்டு பிரசுரம், சுற்றறிக்கை, விளம்பரத்தை அச்சடித்து, வெளியிடுதல் கூடாது. வாக்குசாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் ஆதரவு கோருதல், வாக்களிக்க வேண்டுதல் கூடாது.  வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நடத்தல்,தேர்தல் பணியில் இருக்கும் அலுவலரை பணியை செய்யவிடாமல் தடுக்கக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகள் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வந்தன.  அதனால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், போட்டியிடும் வேட்பாளர்களும்,தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடித்து. தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற எல்லா விதத்திலும் மாவட்ட நிர்வாகத்தோடு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கேட்டுக்கொண்டார்.