திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி நன்கொடை கேட்டு தள்ளுவண்டி உணவகத்தைச் சூறையாடிய இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் 7 தலைமறைவு.
திருப்பூர் பி.என் சாலை போயம்பாளையம் அபிராபி தியேட்டர் ரோடு, கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (52). இவர் அப்பகுதியில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி இந்து முன்னணியைச் சேர்ந்த ராசுக்குட்டி மற்றும் சிலர் விநாயகர் சதுர்த்தி வசூலுக்கு வந்துள்ளனர். அப்போது கணபதி ரூ.550 நன்கொடை கொடுத்திருக்கிறார். அந்தத் தொகைக்கு இந்து முன்னணி பெயரில் ரசீது வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மீண்டும் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் இந்து முன்னணி ராசுக்குட்டி மற்றும் அவருடன் 7 பேர் மது போதையில் கணபதியின் தள்ளுவண்டிக் கடைக்குச் சென்று விநாயகர் சிலை வைக்கக் கூடுதல் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர் ரூ.3 ஆயிரம் நன்கொடை கொடுக்க வேண்டுமெனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். கணபதி ஏற்கனவே நன்கொடை கொடுத்துவிட்டதாக கூறி ரசீதை காட்டியுள்ளார்.
பணம் தர மறுத்து ரசீதை காட்டியதால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி குடிபோதை கும்பல், கணபதியைத் தாக்க முயன்றனர். அவரது தள்ளுவண்டிக் கடையை சூறையாடினர். இது குறித்து கணபதி அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்து முன்னணியைச் சேர்ந்த ராசுக்குட்டி (29) என்பவரைக் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.