tamilnadu

புத்தக விநியோகம் தொடக்கம்:  பேருந்துகள் இயங்காததால் மாணவா்கள் தவிப்பு

திருநெல்வேலி, ஜூலை 14- நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம் துவங்கியது. ஆனால், பேருந்துகள் இயங்கா ததால் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவா்கள் புத்தகம் வாங்குவதற்கு பள்ளிக்குச் செல்ல இயலாமல் தவிப்புக்கு உள்ளாகினர். தமிழக அரசின் உத்தரவுப்படி நெல்லை  மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் திங்களன்று முதல் இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. ஜூலை 17-ஆம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பொது ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயங்காததால் கிராமப்புறங்களில் இருந்து நகராட்சி, மாநகராட்சிப் பகுதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்கள் பள்ளிக ளுக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்ல இயலாத நிலை உள்ளது. ஆகவே, மாணவா்களுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும். அல்லது அஞ்சல் துறை மூலம் புத்தகங்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.