tamilnadu

img

தொடரும் நுண் நிதி நிறுவனங்களின் அடாவடி வசூல்... நடவடிக்கை எடுக்க கே.பாலபாரதி வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி:
கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கும் மக்கள், சுய உதவிக்குழு கடனை செலுத்த நுண் நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாதர் சங்கம், வாலிபர் சங்கதிருச்சி புறநகர் மற்றும் மாநகர் மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாதர் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் மல்லிகா, மாவட்ட தலைவர் லிங்கராணி, மாநகர் மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மாவட்ட தலைவர் ரேணுகா, வாலிபர் சங்க மாநகர் மாவட்டசெயலாளர் லெனின், மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் பேசினர்.

போராட்டத்தின் போது கே.பாலபாரதி நிருபர்களிடம் கூறியதாவது: 
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் ஏராளமானோர் நுண்நிதி நிறுவனங்களிடம் வட்டிக்கு கடன் பெற்றுள்ளனர். ஊரடங்கினால் வருமானமின்றி கடன் செலுத்த முடியாத பெண்களை நுண் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தகாதவார்த்தைகளில் பேசுவது, வீட்டிற்குள் புகுந்து அடாவடி செய்வது, வீட்டில்இருக்கும் பொருட்களை சூறையாடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து காவல் நிலையம், வட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் கொடுத்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கூட தனியார் நிதி நிறுவனங்கள் தங்களுடைய அடாவடி வசூல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவில்லை. திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடனுக்கு உடனடியாக வட்டி கட்ட வேண்டும் என தேசிய வங்கிகளில் இருந்துஏஜெண்டுகள் சென்று மிரட்டுகின்றனர். மத்திய அரசு கால அவகாசம் கொடுத்திருந்தும் வங்கிகள் அந்த கடனை வட்டியோடு உடனே செலுத்த வேண்டும் எனநிர்பந்திக்கும் நிலை  உள்ளது. எனவேஇதுகுறித்து ஆட்சியர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.