தருமபுரி, மார்ச் 19- பாலக்கோடு அருகே 14 வயது சிறுமிக்கு நடந்த திருமணத்தால் மூவரை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சீறியம் பட்டி கரகூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது 14 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியை பாலக்கோடு அடுத்த கென்டிக்கானஹள்ளி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பெரியசாமி (25) என்பவருக்கு, பெரியசாமியின் தாய் லட்சுமி (50) மற்றும் அவரது உறவினர்கள் மாதேஷ் (45), மாது (35) ஆகியோர் சேர்ந்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதியன்று பள்ளம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து பெரியசாமி சிறுமியை பாலியல் உறவு கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சிறுமியின் தந்தை மாதேஷ் பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படை யில் பெரியசாமி, அவரது தாய் லட்சுமி, உறவினர் மாதேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மாதுவை போலீசார் தேடி வருகின்றனர்.