சென்னை, ஜூன் 14- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் மீது பணி ஓய்வு பெறும் நாளில் பழிவாங்கும் நோக்கில் பணி இடைநீக்கம் செய்யப்ப ட்டதை ரத்துசெய்யக்கோரி சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் தொடர் உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி துவங்கிய இந்த போராட்டத்தின் 3வதுநாளான வெள்ளியன்று (ஜூன் 14) உண்ணாநிலையை சஙகத்தின் துணைத் தலைவர் எஸ்.தமிழ்செல்வி துவக்கி வைத்தார். மாநில துணைத் தலை வர் ஆ.சண்முகம் தலைமை வகித்தார். ந.குமரவேல், சு.பார்த்திபன், மொ.ஞானத்தம்பி, மாநிலச் செயலாளர்கள் இரா.பன்னீர்செல்வம், சி.ஆர்.ராஜ்குமார், என்.ஜனார்தனன், தி.கலைச்செல்வி, எம்.சவுந்தரராஜன், ஏ.பெரியசாமி, பொரு ளாளர் எம்.தங்கராஜ் ஆகியோரும் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து மாநில பொதுச் செயலாளர் மு.அன்பரசு பேசினார். 3ஆம் நாள் போராட்டத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வடசென்னை, தென்சென்னை மாவட்டத்தில் இருந்து ஏராளாமனோர் கலந்து கொண்டனர்.
அழைத்துப்பேச வேண்டும்
இதுகுறித்து மு.அன்பரசு கூறியதாவது: அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மீது அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஊழியர்களின் வாழ்வாதாரமான ஓய்வூதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடியவர்கள், தலைமை தாங்கியவர்கள் மீது ஏதாவது வீண்பழி சுமத்தி பணி இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். அப்படித்தான் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியனும் ஓய்வு பெறும் இறுதி நாளன்று பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி பணி இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்களை பழிவாங்கிய எந்த அரசும் ஆட்சியில் நீடித்ததில்லை. இதுதான் கடந்தகால வரலாறு. எனவே அரசு இதன்பிறகும் தொடர்ந்து மவுனம் காத்தால் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்றார்.