tamilnadu

img

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இலங்கை தமிழரின் மகள் கல்லூரியில் இடம் கிடைக்குமா?

தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வையாபுரிதிடல் பகுதியை சேர்ந்தவர் தாயகம் திரும்பிய இலங்கை தமிழர் யோகநாதன். இவரது இளைய மகள் பிரியதர்ஷினி. மணல்மேடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று, கடந்த 2018-19-ல் பிளஸ் 2 தேர்வில் 468 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடம் பெற்றார். இவர் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தரவரிசை பட்டியலில் 494 இடத்தை பிடித்துள்ளார். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இவரது தந்தை கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். 

இதுகுறித்து மாணவி பிரியதர்ஷினி கூறுகையில், “மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த எனது தந்தை அன்றாடம் கூலி வேலைக்கு சென்று வந்தால்தான் வருமானம். சகோதரர் தீபன்ராஜ், சகோதரி தீபிகா உள்ளனர். குடும்ப செலவுக்கே வருமானம் கட்டுபடியாகவில்லை என்பதால் எனக்கு டியூஷன் வகுப்பு செல்லவோ அல்லது கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சி பெறவோ செலவு செய்ய முடியவில்லை. எனது வகுப்பாசிரியர் சரிதா எனது கல்வி மற்றும் நீட் தேர்வு எழுத விண்ணப்பம் செய்தது உட்பட பல்வேறு உதவிகள் தந்து நீட் தேர்வில் பங்கேற்க ஊக்கமளித்தார். 

மேலும் எனது பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் காட்டிய வழிகாட்டலே, எனக்கு நீட் தேர்வு பயம் நீங்கி அதில் பங்கேற்க ஆர்வம் ஏற்பட்டது. மேலும் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அனுமதி கிடைத்துள்ளதை தொடர்ந்து தாழ்த்தப்பட்ட பிரிவு மற்றும் தாயகம் திரும்பிய தமிழர்கள் ஆகிய பிரிவுகளின் இடஒதுக்கீட்டின் வாயிலாக மருத்துவக் கல்வியில் சேர்க்கை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன் என்றார்.இவருக்கு ஒரு செல்போன் வாங்கி தர இயலவில்லை. எனவே நீட் தேர்வு உள்ளிட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்தபோது ஆசிரியை செல் நம்பரை பதிவு செய்துள்ளார். மிகவும் பின்தங்கிய பகுதியில் ஒரு மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், மருத்துவக் கல்வி சேர்க்கையில் இடம் கிடைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள், பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.