tamilnadu

img

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை...

சென்னை
கேரளாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழையை ஒட்டி தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாகச் சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது (சுருக்கம்),"தமிழகத்தின் மேற்கு பகுதி அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாகத் தமிழகம், புதுச்சேரி மாநில பகுதிகளில் லேசான முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாகக் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் புயலாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் வலுவடைந்து நாளை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மேற்கூறப்பட்ட இப்பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள்  செல்ல வேண்டாம் எனவும், சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.