tamilnadu

img

ஒன்றுபட்ட இந்தியாவுக்கு வலுவான மாநிலங்கள் தேவை- டி.கே.ரங்கராஜன் எம்.பி.,

ஒன்றுபட்ட இந்தியாவுக்கு வலுவான மாநிலங்கள் தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமையன்று மாலை உறுப்பினர்கள் கொண்டுவரும் தனிநபர் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. மாநில அரசுகளின் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாறிய துறைகளை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி தனிநபர் தீர்மானத்தை வைகோ கொண்டுவந்தார். அதன் மீதான விவாதத்தில் பங்கேற்று டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:

நம்முடைய மூத்த உறுப்பினர் வைகோ மிகவும் முக்கி யமான தீர்மானத்தை காலத்தே கொண்டு வந்திருக்கிறார். இதன்மீது சில முழுமையாக ஒத்துப்போகலாம் அல்லது ஒத்துப்போகாமல் இருக்கலாம். அல்லது உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் போன்று 50:50 ஒத்துப்போகலாம். எனினும் இதன்மீது விவாதம் நடத்தப்பட்டு உருப்படியாக ஏதேனும் செய்தாக வேண்டும். இந்தத் தீர்மானம், அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாகக் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அது நாட்டிற்கு மிகவும் நலம் பயக்கும்.

பன்முகத் தன்மையே தேவை
இந்தியா பன்முகக் கலாச்சாரங்களுடன் விளங்கும் ஒரு நாடு என்பது இந்தத் தீர்மானத்தில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நம் சமூகம் பன்முகத் தன்மையுடன் விளங்குவதால், தேவைகளும் பல வகைகளில் அமைந்துள்ளன. இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களையும் பல்வேறு மொழிகளையும் உள்ளடக்கிய ஒரு நாடாகும். எனவே ஒவ்வொருவரும் கற்றிடும் கல்வி, நடத்தை மற்றும் ஒவ்வொன்றுமே வித்தியாசமானவைகளாகும். ஒரு மதத்தால் நாட்டில் ஒற்றுமையைக் கொண்டு வர முடியாது. மதத்தால் நாட்டில் ஒற்றுமையைக் கொண்டுவர முடியும் என்றால், பின்னர் உலகில் உள்ள அனைத்துக் கிறித்துவ நாடுகளும் ஒரே தேசமாக இருந்திட வேண்டும். அதேபோன்று அனைத்து முஸ்லீம் நாடுகளும் ஒரே தேசமாக இருந்திட வேண்டும். நாம் ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். ஏனெனில் நம் முன்னோர்கள் விடுதலைப் போராட்ட வீரர்களாக இருந்தது மட்டுமல்ல, அதற்கும் முன்பாக நாடு பல்வேறு பிரிவுகளுடன் இருந்த சமயத்திலேயே, மக்கள் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்குச் சென்று வந்தார்கள். இமாசலப் பிரதேசத்திலிருந்து, கன்னியாகுமரி வரை மக்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள். என்னுடைய முக்கிய கோரிக்கை, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தேவை என்பதாகும். இது மிகவும் முக்கியமாகும். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தேவை. இது தொடர்பாக நான் 42ஆவது திருத்தத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எடை அளவைக் கூடவா எடுத்துக் கொள்வது?
ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டதைப் போல, வனங்கள், வன விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, கல்வி, எடைகள் மற்றும் அளவைகள் முதலான துறைகள் மாநில அரசுகளின் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. எடைகள் அளவைகளைக்கூட ஏன் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் உங்களுக்கு அதிகப் பணம் கிடைக்கும். எடைகள் மற்றும் அளவைகள் தானாகவே மாறியிருக்கிறது. இவற்றையெல்லாம் மத்திய அரசு ஏன் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். எடை மிஷின்களை விற்பது தனியார் வேலை. அடுத்து வனங்கள். மாநிலங்களுக்கு வனங்களின் மீது அக்கறை கிடையாதா? சென்னையிலிருந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி, தில்லிக்கு மாற்றப்படுகிறார். அவர் தமிழ் நாட்டில் உள்ள வனங்களை இங்கிருந்துகொண்டே, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதுபோன்றவை உங்கள் மத்தியப் பட்டியலில் இருக்க வேண்டிய தேவை இல்லை. இவற்றை மாநிலப் பட்டியலுக்கு அனுப்ப முடியும்.

மாநில கலாச்சாரத்துடன் கூடிய கல்வி அவசியம்
அடுத்து, நான் கல்வியைப் பற்றிப் பேச விரும்புகிறேன். நான், என் குழந்தைகளுக்கு, தமிழ்க் கலாச்சாரத்துடன் கல்வியைக் கற்பித்திட விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக, கேரள மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓணம் குறித்துக் கூற விரும்புகிறார்கள். நான், எங்கள் குழந்தைகளுக்குப் பொங்கல் குறித்துக் கூற விரும்புகிறேன். ஆந்திர மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு, சங்கராந்தி குறித்துக் கூற விரும்புகிறார்கள். நீங்கள் அறிவியல் மற்றும் கணிதம் குறித்து பாடத் திட்டங்களைத் தாருங்கள். மற்றவற்றை அம்மாநிலத்தில் உள்ளவர்கள் தீர்மானித்துக் கொள் ளட்டும். மற்ற பாடப் பிரிவுகளையும் நீங்கள் ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இதைத்தான் நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். கல்வி மிகவும் முக்கியமான பிரச்சனையாகும். இது ஏராளமான பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கி றது. நிட்டி ஆயோக்கில் உட்கார்ந்து கொண்டு சிலர் எதையோ முன்மொழிந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை என்னால் ஏற்கவே முடியவில்லை. உங்கள் நிலையே வேறு. நான் ஒரு சாமானிய, நடைபாதைவாசி. நீங்கள் எப்போதும் பறந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படியெல்லாம் என்னால் பறக்க முடியாது. எனவேதான் இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் மாநிலங்களிடமே அதிகாரங்களை வழங்கிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாடாளுமன்றத்திற்கு பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கும், மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியல் அல்லது பொதுப் பட்டியலுக்கும் மாற்றுவதற்கான அதிகாரம் உண்டு. அதனைப் பயன்படுத்திக்கொண்டு மாநி லப் பட்டியலிலிருந்த துறைகளை மீண்டும் மாநிலப் பட்டி யலுக்கு மாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மோடி, ஜெயலலிதா எதிர்த்த ஜிஎஸ்டி
அடுத்து, ஜிஎஸ்டி என்னும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்ட அமலாக்கம் குறித்து அவையின் கவ னத்திற்குக் கொண்டு வரவிரும்புகிறேன். இச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது நாம் அனைவரும் ஆதரித்தோம். வர்த்தகம் பெருகும் என்றும், மூலதனம் வரும் என்றும், புதிய தொழில்கள் வரும் என்றும் அரசுத்தரப்பில் கூறப் பட்டது. ஆனால், என்ன வந்தது? வேலையில்லாத் திண்டாட்டம் மட்டுமே வந்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜிஎஸ்டி உருப்படியாக எந்தப் பலனையும் தந்திடவில்லை. மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஜிஎஸ்டியை எதிர்த்தார். அவர் சரியான முறையில் தான் எதிர்த்திருக்கி றார் என்று நான் நினைக்கிறேன். அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த ஜெய லலிதா இதனை சரியான முறையிலேயே எதிர்த்தார்.  இன்றையதினம் மாநிலங்கள் மட்டுமல்ல, மத்திய அரசும் கூட உரிய நிதி வருவாய் இல்லாமல் பட்டினி கிடக்கின் றது. நம்மால் போதுமான அளவிற்கு நிதி வருவாயைப் பெற முடியவில்லை. நேற்றையதினம், நான்கைந்து மாநி லங்கள், தங்களுக்கு நிதி தேவை என்று கோரி இருக்கின் றன. அவர்களுக்கு அனுப்ப வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை அனுப்பவில்லை. ஏனெனில், ஜிஎஸ்டி  மாநிலங்களுக்கு உடனடி நிவாரணத்தை அளிக்கவில்லை.

மத்திய திட்டங்களுக்குக் கூட ஒழுங்காக நிதி அனுப்புவதில்லை
நான் அரசமைப்புச் சட்டத்தை மதிக்கிறேன். நம் நிதி ஆணையத்தையும் மதிக்கிறேன். 14ஆவது நிதி ஆணை யத்தின் அறிக்கையானது, மாநிலங்களுக்கு நிதி சுயாட்சியை அதிகரிக்கக் கூடிய விதத்தில் மாற்றங்களைப் பரிந்துரைத்திருக்கிறது. மத்திய வரி வருவாயில் 32 சத வீதத்திலிருந்து 42 சதவீதம் வரையிலும் அளித்திட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. இது வரவேற் கத்தக்கது. ஆனால் நடந்தது என்ன? மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி ஒதுக்கீடுகள் குறைந்திருக்கின்றன. மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. மாநிலங்கள் நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி கூட ஒழுங்காக அனுப்பப்படவில்லை. இவ்வாறு அனைத்து மாநிலங்களுமே அவதிக்குள் ளாகி இருக்கின்றன. அதே சமயத்தில் மத்திய அரசு செஸ் வரி மற்றும் சர்சார்ஜ் வரிகளை கணிசமான அளவிற்கு அதி கரித்துக் கொண்டிருக்கிறது. 13ஆவது நிதி ஆணையத்தின் கீழ் அளிக்கப்பட்ட தொகையைவிட 14ஆவது நிதி ஆணை யத்தின்கீழ் அளிக்கப்பட்ட தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டி ருக்கிறது.

மாற்று ஆவணத்தை பரிசீலியுங்கள்
இப்போது நாம் 15ஆவது நிதி ஆணையத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அரசானது, இந்த நாடு பல மொழிகள் கொண்ட, பல மதங்கள் கொண்ட, பல கலாச்சாரங்கள் கொண்ட நாடு என்பதை மதித்திட வேண்டும். தயவுசெய்து இவற்றை மதித்திடுங்கள். ஒற்றுமை மிகவும் முக்கியம். ஒன்றுபட்ட இந்தியாவுக்காகவே நாம் இருக்கிறோம். வலுவான மாநி லங்களுக்காக, வலுவான நகராட்சிகளுக்காக, வலுவான மாநகராட்சிகளுக்காக, வலுவான ஊராட்சிகளுக்காக நாம் இருக்கிறோம். இதில் எவ்விதமான மாற்றுக் கருத்துக் கும் இடமில்லை. தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கேரள முதலமைச்ச ராக இருந்தபோது, அவர் திட்டக் கமிஷனக்கு மாற்று ஆவணம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அதனைப் பரி சீலித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வைகோ மிகச் சரியாகக் குறிப்பிட்டதைப்போல, மேற்குவங்கத்தில் தோழர் ஜோதிபாசு முதலமைச்சராக இருந்த சமயத்தில் மாநி லங்களுக்கு அதிக அதிகாரங்கள் கோரி மாநிலங்களின் மாநாட்டை நடத்தினார். இவ்வாறு ஒரு மாற்று ஆவணத்தை நாங்கள் மத்திய அரசுக்கு அளித்திருக்கிறோம். இந்தியா ஒற்றுமையுடன் திகழ இடதுசாரிகளும் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.     (ந.நி.)