tamilnadu

ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு  

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியக் குழு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. துணைத்தலைவர் பதவிக்குப் புதன்கிழமை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி கமலக்கண்னன் தலைமையில் பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி உள்ளிட்டோர் பேராவூரணி ஊராட்சி ஒன்றியக் கூட்டரங்கில் துணைத் தலைவர் தேர்தலை நடத்துவதற்குத் தயார் நிலையில் இருந்தனர்.  மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் திமுகவைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும், ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ அதிமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டி யிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுகவைச் சேர்ந்த மாலா போத்தியப்பன் ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் 6, பாஜக 1, அதிமுக ஆதரவு சுயேச்சை உறுப்பினர் 1 ஆகியோர் வரவில்லை. இதனால், மறு தேதி குறிப்பிடப்படாமல் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  அதிமுக-வில் துணைத்தலைவர் பதவிக்குப் பாஜக, சுயேச்சை உறுப்பினர் மற்றும் அதிமுகவினர் இடையே கடும் போட்டி நடப்பதால் யாருக்குத் துணை தலைவர் பதவியைக் கொடுப்பது என்ற குழப்பத்தில் ஒவ்வொரு முறையும் தேர்தல் தள்ளிப் போகிறது. இதனால் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை எனப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.