கும்பகோணம் டிச.7- கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் பாபநாசம் வட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநாட்டில், வருவாய்த்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தற்போது வழங்கி வரும் பொங்கல் போனஸ் ரூபாய் 1000 என்பதை 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாநில துணைத்தலைவர் வின்சன்ட், வட்ட செயலாளர் கார்த்திக், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.