தஞ்சாவூர், செப்.21- பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றிய குழு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியக் குழு கூட்டம் செயலாளர் ஏ.வி.குமாரசாமி தலைமையில் நடந்தது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.வாசு ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், காரைக்குடி திருவாரூர் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் சேவையை தொடங்க வேண்டும். காரைக்குடி திருவாரூர் ரயில் சேவையை முறைப்படுத்தி இயக்க வேண்டும். பேராவூரணி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே உடனடியாக துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் புகை மருந்து அடிக்கும் பணியை சுகாதாரத் துறையினர் உடனடியாக தொடங்க வேண்டும். பேராவூரணி பேருந்து நிலையக் கட்டணக் கழிவறை சுகாதார சீர்கேட்டின் உச்சத்தில் உள்ளது. அவற்றை சரி செய்ய வேண்டும். அங்கிருந்து கழிவுநீர் வெளியேறி பேருந்து நிலையத்தில் ஓடும் நிலை உள்ளது. இவற்றை சரி செய்ய பேராவூரணி பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.