tamilnadu

img

மத்திய வேளாண் சட்டங்களை முறியடித்திட ராஜஸ்தானில் சட்டங்கள் நிறைவேற்றம்.....

ஜெய்ப்பூர்:
மத்திய வேளாண் சட்டங்களை முறியடிக்கும் விதத்தில் ராஜஸ்தான் மாநிலசட்டமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் திங்கள் அன்று நிறைவேற்றப்பட்டன.சனிக்கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டமுன்வடிவுகள் ஒன்பது மணி நேரம் விவாதம் நடைபெற்றபின் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப் பட்டது. இதன் மூலம் பஞ்சாப்பிற்கு அடுத்ததாக, ராஜஸ்தான் மாநிலம் மத்திய வேளாண்சட்டங்களை நிராகரித்துள்ள இரண்டாவது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்க மாகும்.

மூன்று சட்டமுன்வடிவுகள்
மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாநிலத்தில், விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்து தல் மற்றும் வசதிசெய்து தருதல்)(ராஜஸ்தான் திருத்தச்) சட்டமுன்வடிவு, 2020, விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைசேவைகள் மீது விவசாயிகள் (அதிகார மளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் (ராஜஸ்தான் திருத்தச்)சட்டமுன்வடிவு, 2020 மற்றும் அத்தியாவசியப் பண்டங்கள் (சிறப்பு ஷரத்துக்கள் மற்றும் ராஜஸ்தான் திருத்தச்) சட்டமுன்வடிவு,  2020 ஆகிய மூன்று சட்டமுன்வடிவுகள்கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளன.இந்தச் சட்டமுன்வடிவுகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து உரையாற்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சாந்தி தாரிவால், “மத்தியில் பாஜக தலைமையில் உள்ள அரசாங்கம், விவசாயிகள் ஒழித்துக்கட்டிவிட்டு, ஒட்டுமொத்த விவசாயத் துறையையும் பெரும் கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறது. இதனை இவர்கள் ராஜஸ்தானில் நிறைவேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.  95 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த விவசாய விளைபொருள்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையைப் பெறமுடியவில்லை. நாங்கள் மேற்கொண்டுள்ள திருத்தச் சட்டங்கள் அவர்களைப் பாது காத்திடும்,” என்றார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், “மத்தியச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், அவை பொது விநியோக முறையைக் கடுமையாகப் பாதித்திடும். ஏனெனில், அரிசி மற்றும் கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்கள் அரசாங்கத் தால் கொள்முதல் செய்வதற்குக் கிடைத்திடாது,” என்றார்.(ந.நி.)