ஆஷா தொழிலாளர்களுக்கு கொரோனா கால ஊக்க ஊதியம்
முழுநேரமும் சுகாதாரப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆஷா தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும். அவர்களுக்கு 2020 மார்ச் முதல் மேமாதம் வரை நிபந்தனையின்றி கவுரவத் தொகையுடன் ஊக்க ஊதியம் வழங்கப்படும். கொரோனா காலம் முடியும் வரை கூடுதல் ஊக்க ஊதியமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதன்மூலம் 26,475 ஆஷா தொழிலாளர்கள் பயனடைவார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாறுபட்ட பணிகளை ஆஷா தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், கொரோனா பாதித்த மாநிலங்களிலிருந்து வந்தவர்களின் பட்டியல் தயாரிப்பது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் வாழ்க்கை முறை குறைபாடுகள் உள்ளவர்களின் பட்டியல் தயாரித்து மருத்துவர்களிடம் கொடுத்து அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் கையிருப்பில் உள்ளதை உறுதி செய்தல் போன்ற சேவைகளில் ஆஷா தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என முதல்வர் கூறினார்.
திருவனந்தபுரம், ஏப்.23- கேரளத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விவசாயிகள் அதிக வருமாய் ஈட்டவும் விவசாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். அவர்கள் அடுத்த திங்கட்கிழமை மீண்டும் சந்தித்து திட்டத்துக்கான இறுதி வடிவம் கொடுப்பார்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரள அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் மற்றும் கொரோனா நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது: தரிசு நிலங்களில் முழுமையான சாகுபடி என்பதே திட்டத்தின் நோக்கம். ஒவ்வொரு பஞ்சாயத்திலும், பயன்பாட்டில் இல்லாத நிலம் துல்லியமாக அடையாளம் காணப்படும். நில உரிமையாளர்கள் கவலைப்பட வேண்டாம். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் திட்டம் அமல்படுத்தப்படும். இதில் வேளாண் துறையும் உள்ளாட்சி அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நீர்ப்பாசனம், கால்நடை பராமரிப்பு மற்றும் கூட்டுறவு துறைகள் இதில் பங்கேற்கும். இந்த நடவடிக்கை மழைக்கு முன்பே தொடங்கலாம் என்பது எதிர்பார்ப்பு.
விவசாயத்தில் வழக்கமான முறைகள் மட்டுமல்லாது அதிக பட்ச வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். மாடித்தோட்டங்களில் முடிந்த அளவு பயிர் செய்யலாம். கடலில் மீன் வளர்க்கும் அறிவியல் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. மாடு, கோழி, ஆடு, பன்றி வளர்த்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டம் உருவாக்கப்படும். முட்டை, இறைச்சி போன்றவற்றின் உற்பத்தியில் தன்னிறைவை அடைய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவுத்துறை மூலம் வேளாண்துறைக்கு கடன் கிடைக்க தேவையான திட்டம் உள்ளது. அதற்கு நபார்டு வங்கியின் உதவி கோரப்படும். தினசரி 75 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்வதற்கான திட்டம் உருவாக்கப்படும். ஒரு வீட்டில் 5 கோழிகள் வளர்ப்பதில் சிரமம் இருக்காது. சராசரியாக 2 முட்டைகள் அதன் மூலம் கிடைக்கும். ஒரு குடும்பத்தில் ஒன்றிரண்டு பசுக்களை வளர்ப்பதற்கான திட்டம் உருவாக்கப்படும். பஞ்சாயத்தில் 5 முதல் 10 பசுக்களை வளர்க்கும் பண்ணைகள் துவக்கப்படும்.
11 நபர்களுக்கு கொரோனா
கேரளத்தில் புதனன்று மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒருவர் மட்டும் கோவிட்டிலிருந்து விடுபட்டார். கோவிட் உறுதி செய்யப்பட்ட 11 நபர்களில் 3 பேருக்கு பிறர் தொடர்பால் தொற்று ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 5 பேர். சுகாதார பெண் ஊழியர் ஒருவரும் இரண்டு பயிற்சி மருத்துவர்கள், மலப்புறம் மாவட்டத்தில் 4 மாத குழந்தைக்கும் கொரோனா உறுதியானது. அந்த குழந்தை இதயக்கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்தது. தற்போது கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளது அந்த குழந்தை. கேரளத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் சோதனையால் வாகன எண்ணிக்கை குறைந்துள்ளது. அனைவரும் வீடுகளில்தான் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வீடுகளில் ஒப்படைக்கும் ஏற்பாடு உள்ளது.
பொருளாதாரத் தாக்கம்
கொரோனா தேசிய அளவிலும் மாநிலத்திலும் பொருளாதாரத் துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். தேசிய பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அனுபவிக்கும் நேரத்தில் கொரோனா தொடங்கியது. எட்டு முதல் ஒன்பது சதவிகிதம் வரையிலான வளர்ச்சியிலிருந்து ஐந்து சதவிகிதத்துக்கும் கீழ் வீழ்ச்சியடைந்தபோது கொள்ளை நோய் வந்தது. இந்த சூழலில், கேரளாவில் உட்கட்டமைப்பு மற்றும் சமூக தலையீட்டை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை 7.5 சதவிகிதமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாம் இரண்டு இயற்கை பேரழிவுகளை எதிர் கொண்டோம். மாநிலத்தின் பொது நிதி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சமூக நலச் செலவுகளிலிருந்து அரசாங்கம் விலகிச் செல்லவில்லை. ஊரடங்குக்கு பிறகு, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. செலவில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது. சுகாதாரம், உணவு பாதுகாப்பு துறைகளில் அரசின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான செலவுகளை தவிர்க்க முடியாது.
அரசு ஊழியர் சம்பளப் பிடித்தம்
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நமது முன்னேற்றத்தை கைவிடமுடியாது. இந்த சூழலில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் நிவாரண நிதிக்கு பணம் தருவது ஆறுதல் அளிப்பதாகும். கைநீட்டக் காசு (புத்தாண்டில் கிடைக்கும் அன்பளிப்பு) முதல் மாத வருவாய் வரை நிவாரண நிதியாக வழங்கப்படுகிறது. நல ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக தருகிறவர்கள் உள்ளனர். உணவுத் தேவைகளுக்காக ஒரு பகுதியை ஒதுக்கி வைத்துவிட்டு நன்கொடை தருகிறார்கள். நெருக்கடியான நேரத்திலும் வெளிநாடுவாழ் மலையாளிகள் உதவி செய்கிறார்கள். மாநில அரசு ஊழியர்களும் அவர்களது சம்பளத்திலிருந்து பெருமளவில் நிவாரண நிதியாக வழங்கத் தயாராகி வருகிறார்கள்.
பெரும் சவாலை எதிர்கொள்ள தாராளமான உதவியை அரசு ஊழியர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒருபகுதியை தற்காலிகமாக பிடித்தம் செய்ய புதனன்று (ஏப்.22) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 6 நாள் சம்பளம் வீதம் 5 மாதங்களில் ஒரு மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 30 சதவிகிதம் ஓராண்டு காலத்துக்கு பிடித்தம் செய்யப்படும்.
உலக புத்தக தினம்
ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகும். அதற்கு முன்னோடியாக புதனன்று மிகவும் முக்கியத்துவம் கொண்ட 3 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. கொரோனா காலத்தில் குழந்தைகள் எழுதிய கதை, கவிதை, கட்டுரைகளின் தொகுப்பே இவை. நமது கல்வித்துறை இதற்கான முன்மொழிவை அளித்தது. புத்தகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் பெற்றுக்கொண்டார் என முதல்வர் கூறினார்.