திருவண்ணாமலை, ஜுலை 4- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை – வேலூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அஞ்சுகம் நகர் வழியே ஆடையூர் வழியாக காஞ்சி செல்லும் சாலைக்கு இணைப்புச் சாலையாக இந்த சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த சாலையின் இடையே சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ள இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.