tamilnadu

மாணவர்களின் உயிர் தான் முக்கியம்: அமைச்சர்

சென்னை:
பள்ளிகளைத் திறப்பதை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என்றும், பள்ளிகளைத் திறப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.கொரோனா தொற்று காரணமாக தமிழ் நாட்டில் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. தொடர்ந்து, ஆறு மாதங்களாக பள்ளி, கல்லூரிகள், மூடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, மாணவர்கள் இணையவழிப் பாடங்களை கற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.மேலும், தற்போது உள்ள சூழலில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டங்கள் குறைப்பு, பொதுத் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.பொதுத் தேர்வை தள்ளி வைக்கலாமா என்பன போன்ற முக்கிய முடிவுகள் குறித்தும் அலுவலர்களின் கருத்துகளை கேட்கவுள்ளார்.மேலும், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவுடன், அமைச்சர் செங் கோட்டையன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளதாகவும், பள்ளிகளை ஆய்வு செய்வதில் சுணக்கம் கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு செங்கோட்டையன் அறிவுறுத்தினார். 

ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்குமாறும், மாணவர்கள் பார்வைத் திறன், கண் பார்வையையும் அவ்வப்போது பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.மேலும், பள்ளிகளைத் திறப்பதை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என்றும், பள்ளிகளைத் திறப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.