குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை தடுக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
பெரம்பூர் 35வது வட்டத்தில் சிபிஎம் நடத்தியது
சென்னை, மே 4- பெரம்பூர் பகுதி 35ஆவது வட்டம் கண்ணதாசன் நகர் 1 முதல் 5ஆவது பிளாக் வரை உள்ள தெருக்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்த வருவதை தடுக்கக் கோரி சிபிஎம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கண்ணதாசன் நகர் 1 முதல் 5ஆவது பிளாக் வரை உள்ள குடிநீர் குழாய்களில் நீண்ட நாட்களாக கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் வீடுகளில் பயன்படுத்த முடியாமலும், தொற்று நோய் ஏற்பட்டும் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேத மடைந்து கழிவுநீர் கலந்து வருகிறது. இது குறித்து கட்சியின் சார்பில் பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தோம். அந்த நேரத்திற்கு தற்காலிகமாக சீரமைத்து விட்டு போகிறார்களே தவிர, நிரந்தர தீர்வுக்காண எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய்களை அமைத்து பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி போராட வேண்டிய சூழல் ஏற்படும் என்றார். இதில் பகுதிச் செயலாளர் அ.விஜய குமார், நிர்வாகிகள் டி.சரவணன், டி.மகேஷ், எம்.பரதன், சி.அரி, எஸ்.ஏ.வெற்றிராஜன், தியாகராஜன், பெருமாள், பி.பாக்கிய லட்சுமி, நாராயணன், பி.பைரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.