சென்னை,அக்.9- கூட்டுறவுத்துறையின் மூலம் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே காய்கறிகள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறி சந்தைகளுக்கு வரத்து வெகுவாக குறைந்தது. காய்கறிகளின் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள், நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி மற்றும் இதர காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட வெங்காயம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், ஒரு கிலோ தக்காளி ரூ.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டும் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.