இந்தியருக்கு எதிராக இந்தியரை யுத்தத்தில் இறங்கச் சொல்லும் ஆர்எஸ்எஸ்சின் இந்தக் கொடூரக் கோட்பாட்டை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன் மற்றும் க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;
ஆர்எஸ்எஸ்சின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் சிறுபான்மை மதத்தவருக்கு எதிராக விஷம் கக்கியுள்ளார். அவர்களது ஏடுகளுக்கு அவர் தந்துள்ள ஒரு பேட்டியில் முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்கியுள்ளார். "முஸ்லிம்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் எனும் மேட்டிமைத்தனத்தைக் கைவிட வேண்டும். தாங்கள் உயர் இனத்தவர், இந்த நாட்டை ஆண்டவர்கள், மீண்டும் இதை ஆள்வோம், எங்களது பாதையே சரியானது, ஆகவே சேர்ந்து வாழ முடியாது எனும் சித்தரிப்பை கைவிட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
இப்படி முஸ்லிம்கள் எங்கே பேசுகிறார்கள்? பாஜக ஆட்சியில் தங்களது உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து அவர்கள் தவிக்கிறார்கள். இவரோ ஒரு பொய்யுரையைக் கட்டமைத்து, அவர்கள் மீது இந்துக்களுக்கு வெறுப்புணர்வை மூட்டும் சதிவேலையில் ஈடுபடுகிறார். "இந்துக்களின் தேசம், முஸ்லிம்களின் தேசம் என்று இரு தேசங்கள் இங்குள்ளன" என்று பிரிவினைவாதத்தை முதலில் முன்வைத்ததே இவர் போற்றுகிற சாவர்க்கர்தான். இதுதான் முடிவில் இந்தியாவின் பிளவுக்கு வழிவகுத்தது எனும் சரித்திர உண்மையை மறைத்து இன்றைய முஸ்லிம்கள் மீது அவதூறு பொழிகிறார்.
இதன் நீட்சியாக முஸ்லிம்கள் மீது சங்பரிவாரம் தொடுக்கும் தாக்குதல்களை நியாயப்படுத்துகிறார். "இந்து சமூகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யுத்தத்தில் உள்ளது. இது உள்ளுக்குள்ளேயே இருக்கும் எதிரியை எதிர்த்து. இந்து சமூகத்தை, இந்து தர்மத்தை, இந்து கலாச்சாரத்தை பாதுகாக்கும் யுத்தம் இது. யுத்தம் என்பதால் உணர்ச்சி கொந்தளிப்பு ஏற்படுகிறது. கூடாது என்றாலும் ஆவேச வார்த்தைகள் எழத்தான் செய்கின்றன" என்கிறார்.
ராஜாக்கள்தான் யுத்தத்தில் இருந்தார்களே தவிர இந்து சமூகம் அல்ல. சொல்லப் போனால் இந்து ராஜாக்களின் படையில் முஸ்லிம்களும், முஸ்லிம் ராஜாக்களின் படையில் இந்துக்களும் இருந்து போர் புரிந்தார்கள். நாடுபிடி யுத்தங்களை மத யுத்தங்களாகச் சித்தரித்து இன்றைய முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை கிளப்பிவிடும் கீழ்த்தரமான செயலில் இறங்கியிருக்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர்.
இவர் பேசுகிற இந்து தர்மத்தில் பஞ்சமர்கள் மற்றும் சூத்திரர்களின் நிலை என்னவாக இருந்தது, இருக்கிறது என்பது பற்றி இவர் பேசமாட்டார். இவர் பேசுகிற இந்துப் பண்பாட்டில் பெண்களின் நிலை என்னவாக இருந்தது, இருக்கிறது என்பது பற்றிப் பேச மாட்டார். இந்து ராஷ்டிரம் அமைக்கும் தங்களது குறிக்கோளில் உறுதியாக இருப்பதாகச் சொல்கிறவர் அந்த ராஜியத்தில் இவர்களது நிலை என்னவாக இருக்கும், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் நிலை என்னவாக இருக்கும் என்பது பற்றி இவர் பேச மாட்டார். இந்து ராஷ்டிரம் என்பது நடப்பில் மனு ராஷ்டிரமாக, சமஸ்கிருத ராஷ்டிரமாக இருக்கும் என்பதை பாஜக ஆட்சியின் கொள்கைகளிலிருந்தே எளிதில் உணரலாம்.
இந்தியருக்கு எதிராக இந்தியரை யுத்தத்தில் இறங்கச் சொல்லும் ஆர்எஸ்எஸ்சின் இந்தக் கொடூரக் கோட்பாட்டை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. சங் பரிவாரத்திற்கு எதிராக சிறுபான்மையோர் மட்டுமல்லாது, பெரும்பான்மையோரும் அணிதிரள வேண்டும் என்று மேடை அறைகூவல் விடுக்கிறது. அப்போதுதான் நாட்டை மதக் கலவர அழிவிலிருந்தும், மனுஅதர்ம ஆட்சியிலிருந்தும் காக்க முடியும் என்பதை மேடை சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.