சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 24-ஆம் தேதி அன்று நடந்த கூட்டத்தில் இட ஒதுக்கீடு மசோதா கிடப்பில் இருப்பதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்றும் பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வலியுறுத்தி விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும், அதற்கு பா.ம.க ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வலியுறுத்தி முதல்வர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்ட பிறகு இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.