திருவள்ளூர், நவ .26- வறுமை ஒழிப்புத் திட்டங்களை பழங்குடி இன மக்கள் மத்தியில் கொண்டு செல்லாத, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (நவ 25), திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைசார்பில் புதிய திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவிப்பு செய்திருந்தது. இதில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்க வேண்டும்,கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்க வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடி இன மக்களுக்கு இத்திட்டங்கள் முறையாக சென்று சேரவில்லை. மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 57 பழங்குடி கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் உள்ளன.
இவற்றில் 33 சங்கங்கள் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதன் விளைவாக 33 சங்கங்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் கிடைக்கவில்லை என்பதால், பல கிராமங்களில் பழங்குடி இன கிராமங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்படாத நிலை உள்ளது. இதனால் ஆதார நிதி, சுழல்நிதி, சமுதாய முதலீட்டுநிதி மற்றும் அரசு வங்கிகளில் கடன் கிடைக்காமல் நுண்நிதி வங்கியிலும், கந்து வட்டியிலும் கடன் பெற்று சிக்கிய பழங்குடி இன மக்கள் ஊரை விட்டு வெளியேறுவதும், தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாக சென்றுள்ளது.
மேலும் கொத்தடிமைகளாக வாழ்வதும் வீட்டுமனை பட்டாக்களை அடமானம் வைத்து கடனை அடைப்பது போன்ற அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து தமிழ்நாடு வாழ்வார இயக்க திட்ட இயக்குநர் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (நவ 25), திருவள்ளூர் டோல்கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கினார். இதில் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாநில துணைச் செயலாளர் இ.கங்காதுரை, மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை, பொருளாளர் எஸ்.குமரவேல், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கலையரசன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகிகள் வஜ்ரவேலு, தமிழரசி, தேவி, அந்தோணி, முருகன், டில்லி, அற்புதம் ஆகியோர் பேசினர்.