ஹன்சிகா, பூமிகா... திரைப்பட கலைஞர்களாக இவர் களை நமக்கு தெரியும். ஆனால் ஏரிக்குள் பனை ஓலை குடிசையில், புழுதி மண்ணில் விளையாடும் ஹன்சிகா, பூமிகாவை நமக்கு தெரியாது. உளுந்தூர்பேட்டையில் இருந்து சில கிலோ மீட்டர் சென்றால் ஏரிக்குள் உள்ள 25 இருளர் இன குடும்பத்தினரின் செல்ல மகள்கள்தான் ஹன்சிகா, பூமிகா. இப்படி ஏராளமான ஹன்சிகாக்கள் எந்த அடிப்படை வசதியும் இன்றி இங்கு வசிக்கின்றனர்.
விலங்கோடு விலங்காக...
ஏரிக்குள் வசிக்கும் இந்த இருபத்தைந்து இருளர் இன குடும்பங்க ளில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு குடும்ப அட்டைகூட கிடைக்க வில்லை. சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் சாதிக்கவும் இயலாமல் சான்று கேட்டே தொடர் போராட்டம். ஏரியில் மின் கம்பங்கள் பல இவர்கள் வசிக்கும் இடத்தின் மேலேயே சென்றாலும் இங்கே ஒரு விளக்கு வசதி கூட கிடையாது. இருளிலேயே வசிக்கும் இருளர் இன மக்களாகவே இவர்கள் உள்ளனர். இரவு நேரங்களில் பல்வேறு விஷ ஜந்துக்கள் மற்றும் சில மிருதுவான காட்டு விலங்குகளுக்கு நடுவே காலத்தை கழிக்கின்றனர்.
படிப்பை பாழாக்கும் டாஸ்மாக்...
ஏரிக்கரையின்மேலே நடந்து இம்மக்களின் சில குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். இதுகுறித்து வெங்கடேசன் என்ப வரின் மனைவி பூபதி (31) கூறுகை யில் “ஆண்கள் துணையில்லாமல் நாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது. காலையிலும் மாலையிலும் சிலர் கொண்டு சென்று விட்டு விட்டு மாலையில் அழைத்து வருவோம். ஏனென்றால் வழியிலேயே ஒருபுறத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது. இங்கு குடிப்பதற்கு வரும் பலரால் பல்வேறு வகைகளில் பிரச்சனை கள் உருவாகிறது. பெண் குழந்தை கள் தனியே உளுந்தூர்பேட்டை நகருக்கு சென்று வர இயலாது. எனவே ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே பெண் குழந்தைகளை படிக்க அனுப்புகிறோம்" என வேதனையுடன் கூறினார்.
ஏறும் ஏரித்தண்ணீர்.. இறங்கும் இருளர் வாழ்க்கை..
மழைக்காலங்களில் ஏரியில் தண்ணீர் ஏறினால் மரத்தடியே இவர்களின் வாழ்விடமாக மாறும். ரேஷன் கடைக்கு செல்வது, மருத்துவம் உள்ளிட்ட வேறு பல அத்தியாவசிய தேவைகளுக்கு குறைந்தது மூன்று கிலோ மீட்டர் தூரம் இவர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளும் தினசரி நடந்தே சென்று வருகின்றனர். “பலமுறை அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அடித்தட்டு மக்களாகிய எங்களுக்கு அரசின் எந்த சலுகைகளும் கிடைக்க வில்லை” என்றனர் விசாலாட்சி, சங்கீதா, மல்லிகா, ஆவாரம்பூ, மீனாட்சி உள்ளிட்ட இருளர் இனப் பெண்கள்.
பொய் வழக்குகள்...
ஜனநாயக மாதர் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செய லாளர் இ.அலமேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு நாவலூர் மேற்கு ஒன்றியச் செயலா ளர் டி.எஸ்.மோகன் ஆகியோர் இவர்களின் வாழ்விடத்திற்கு வயல்வெளிப் பாதைவழியே சென்று நேரில் சந்தித்து பேசிய போது அவர்களை சூழ்ந்து கொண்ட பெண்கள் “பல்வேறு சிரமங்கள் எங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் காவல்துறையின் தொல்லை என்பது கூடுதலாக உள்ளது. எங்கே களவு போனாலும் எங்களைப் போன்ற இருளர்கள் மீது பழி சுமத்தி கைதுசெய்து சிறையில் அடைக்கின்றனர். இதனால் அப்பாவி இருளர் மக்கள் ஏராள மானோர் பாதிக்கப்பட்டு பெண்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறோம். தற்போது கூட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள னர்” என வேதனையுடன் தெரிவித்த னர்.
வீடும், சான்றும் வழங்குக...
தற்போது அதிகாரிகள் இவர்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை ஒதுக்கித் தருவதாகக் கூறி இருந்தாலும், இவர்கள் தற்போது வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே உள்ள பெரும் நில உடைமையாளர் ஒருவர் சுய லாபத்திற்காக இந்த இருளர் இன மக்களின் இடத்தை மாற்ற தடையாக இருப்பதாக தெரிகிறது. எனவே உடனடியாக உளு ந்தூர்பேட்டை நகருக்கு அருகி லேயே இவர்களுக்கு வீட்டு மனையும், வீடும் அமைத்துக் கொடுத்து சாதிச்சன்றிதழ் குடும்ப அட்டை உள்ளிட்டவைகளை வழங்கிட வேண்டுமென மாதர் சங்கச் செயலாளர் அலமேலுவும், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகனும் கூறினர்.
வாக்கும்... வக்கிரத்தனமும்...
நடைமுறை வாழ்க்கையில் எந்த வசதியும், வாய்ப்புமற்ற இருளர் இன மக்கள் தங்கள் குழந்தைகளின் பெயர்களிலாவது எழில் இருக்கட்டும் என்று இப்படிப்பட்ட பெயர்களை சூட்டி மனதளவில் பூரிப்படைகின்றனர். ஆனால் வாக்குக்காக இவர்களை அணுகும் ஆளும் கட்சிகள் அதன்பின் இவர்களை வக்கற்றவர்களாகவே வைத்திருப்பது நயவஞ்சக நரியின் வக்கிரத்தனம் போன்றதே.
வி.சாமிநாதன்.