சென்னை:
தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங் களிலும் உள்ள இளைஞர்களும் - ஏழை எளிய, நடுத்தர மக்களும் வேலை இழப்பு, வருமான இழப்பு என்ற இரட்டிப்புக் கொடுமைகளில் சிக்கி – தினமும் இன்னல்களினால் திணறிக் கொண்டிருப்பதை முதலமைச்சர் பழனிசாமி இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது பெரிய தவறு.தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை - குறிப்பாக, கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்கப் பரிந்துரைகளை அளிக்குமாறு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவினை அதிமுக அரசு அமைத்தது. 250 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அந்தக்குழு முதலமைச்சரிடம் அளித்து ஒரு மாதத்தை நெருங்கி விட்டது.ஆனால் அந்த அறிக்கையை, மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, வெளியிடவும் இல்லை; பரிந்துரைகள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை.அரசின் தோல்வியைத் திசைதிருப்ப முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்து எதையும் சொல்லாமல் - புரிந்துணர்வு ஒப்பந்த விளம்பரங்கள் மட்டும் வெளியிடப்படுகிறது.
வேலைகளில் ஈடுபட்டு - வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் தமிழக இளைஞர்களை ஏமாற்றாமல் - கிராமப் புறத்தில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பெருக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதேபோல் நகர்ப்புறத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிட, பிரத்தியேகமாக ஒரு “நகர்ப் புற வேலை வாய்ப்புத் திட்டத்தை” அறிவிக்குமாறு முதலமைச்சர் பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை, தேவையான அளவுக்கு, கிராமங்களிலும், நகரங்களிலும் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.