சென்னை, ஜூலை 18- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் திருவேங்கடம் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களில் முதலில் 8 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாக, திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை தீவிரம் அடைந்த நிலையில், தற்போது, ஆம்ஸ்ட்ராங் கொலைச் சதியில் தொடர்புடைய அதிமுக சென்னை திருவல்லிக்கேணி நிர்வாகியும் வழக்கறிஞருமான மலர்க்கொடி சேகர், தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இதையடுத்து மலர்க்கொடி மற்றும் ஹரிஹரன் இருவரும் அந்தந்த கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஜகவின் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் அஞ்சலை என்பவர் தலைமறை வாகியுள்ளார். அவர் மீது புளியந்தோப்பு காவல்நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.
பாஜக சிறுபான்மையினர் மண்டலத் தலைவர் செல்வராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது வரைக்கும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல ரவுடி சம்போ செந்திலை யும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக ரூபாய் பத்து லட்சம் பணம் கொடுத்ததாகவும் கொலை சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக ஆட்களை அனுப்பி உளவு பார்த்ததாகவும் தெரிய வந்துள்ளது. கொலைக்கு பயன் படுத்திய 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.