வேலூர், ஜூலை 2- அரசு மேல்நிலைப்பள்ளியில் திறந்தவெளியில் தரையில் அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலை. மேலும் போதிய வகுப்பறை, கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். ஆம்பூர் அருகே தேவலாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதற்கு முன்பு இந்த பள்ளி உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்தது. அப்போது மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. இந்நிலையில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இங்கு 1000 பேர் வரை படிக்கின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களுக்கும், அதிக தேர்ச்சி கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் தங்கம் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பள்ளி பொதுத்தேர்வில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இதனால் இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும், அதற்கேற்ப போதுமான வகுப்பறைகள் இல்லை. 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஏற்கனவே உயர்நிலைப் பள்ளியாக இருந்த பழைய கட்டிடத்திலும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அங்கிருந்து சற்று தூரத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திலும் படித்து வருகின்றனர். புதிய பள்ளிக் கட்டடம் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பழைய பள்ளியில் 3 கட்டடம் உள்ளது. அதில் ஒரு கட்டடத்தின் பால்கனி இடிந்து விழுந்து கைப்பிடி எதுவும் இல்லாமல் மாடியில் ஒரு வகுப்பறை இயங்கி வருகிறது. இங்கு செல்லும் மாணவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் மற்றொரு கட்டடத்திற்கு செல்லும் படிக்கட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்பள்ளியில் 4 வகுப்பறை மாணவர்கள் தினமும் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் மண் தரையில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் உட்கார இடமும், பாடம் நடத்த கரும்பலகை எதுவும் இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் மாணவர்களை ஒரே அறையில் உட்கார வைக்க வேண்டிய நிலை. பள்ளியில் 3 கழிப்பறைகள் மட்டுமே உள்ளது. இதில் மாணவிகள் 2 கழிப்பறையையும், மாணவர்கள் ஒரு கழிப்பறையும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த கழிப்பறைகளும் மிகவும் மோசமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் போதிய வகுப்பறை கட்டடம் இல்லாத காரணத்தால் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை. எனவே பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்டடம் கட்ட வேண்டும், கூடுதல் வகுப்பறைகளும், விளையாட்டு மைதானமும் அமைக்க வேண்டும். கழிவறைகளை அதிகப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.