tamilnadu

img

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 25 அன்று தமிழகம் முழுவதும் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 25 அன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் குறியீட்டெண் உயர்வுக்கு தகுந்தாற் போல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திடக் கோரியும், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு அரசே உற்பத்தி செய்யும் வகையில் புதியமின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட கோரியும், அதானி நிறுவனத்திற்கு வழங்கும் அதீத கொள்முதல் விலையை குறைத்திட வலியுறுத்தியும்,  ஒன்றிய அரசின் தனியார்மயமாக்கலுக்கு இரையாகாமல் அனைவருக்கும் மின்சாரம், மக்கள் வாங்கும் கட்டணத்தில் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25.07.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

மக்கள் நலனை முன்வைத்து நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக அனைத்து தரப்பு பொதுமக்களும், வணிகர்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் பங்கேற்று வெற்றியடையச் செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.