tamilnadu

img

ஆளுநர் மாளிகை அருகே சிபிஎம் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

மாமேதை காரல் மார்க்ஸ் குறித்தும், அறிவுக்கு புறம்பாக பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாமேதை காரல் மார்க்சின் தத்துவம் குறித்து தரம் தாழ்ந்து பேசி இருந்தார். இதற்கு சிபிஎம் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை அடுத்து, ஆளுநர் ரவி செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. ஆளுநர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற போது, கடலூர், சிதம்பரம் ஆகிய இடங்களிலும், நேற்று உளுந்தூர்பேட்டையிலும், ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று ஆளுநர் மாளிகை அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.