tamilnadu

ஆடி மாத அம்மன் கோயில்கள் தரிசனம் கட்டணமில்லா பயணத்திற்கு அரசு அழைப்பு

சென்னை, ஜூலை 3 - “2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், “வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், கோவிலுக்கு செல்ல இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள், ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களுக்கும் அழைத்து செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், பாரிமுனை காளிகாம்பாள், திருவொற்றியூர் வடிவுடையம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்.

தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சை பெரிய கோவில், வராகி அம்மன், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன், புன்னைநல்லூர் மகா மாரியம்மன், திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை, பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்.

கோவை மண்டலத்தில் கோவை கோணியம்மன், தண்டு மாரியம்மன், பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன், ஆனைமலை மாசாணியம்மன், சூலக்கல் மாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், மதுரை மண்டலத்தில் மதுரை – மீனாட்சியம்மன், வண்டியூர் மாரியம்மன், மடப்புரம் காளியம்மன், அழகர் கோவில் ராக்காயி அம்மன், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்.

திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி – பகவதி அம்மன், முப்பந்தல் இசக்கி அம்மன், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கை அம்மன், மண்டைக்காடு பகவதி அம்மன், குழித்துறை சாமுண்டி அம்மன் ஆகிய கோவில்களுக்கு பயணத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான இந்த ஆன்மீகப் பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது ஜூலை 17, 26, ஆகஸ்ட் 2, 9 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன.

எனவே, ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான http://www.hrce.tn.gov.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து ஜூலை 17-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 

மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு “இந்து சமய அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111, சென்னை மண்டலத்திற்கு 99417 20754, 044-29520937, தஞ்சாவூர் மண்டலத்திற்கு 0436-2238114. கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 0422- 2244335, திருச்சி மண்டலத்திற்கு 0431-2232334, மதுரை மண்டலத்திற்கு 0452-2346445, திருநெல்வேலி மண்டலத்திற்கு 0462-2572783 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.