மதுரை, செப்.12- மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர் தீயில் சிக்கி 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மதுரை காட்ராபாளையம் பகுதியில் இயங்கிவரும் விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த நிலையில் 3 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்ட விசாரணையில் குளிர்சாதனப்பெட்டி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.