tamilnadu

img

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019 உயர்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்

பொது நிதியில் உயர்கல்வியும், தன்னாட்சியும்

இந்த வரைவின் பிற்சேர்க்கை A1இல், கல்விக்கான பொது நிதியை அதிகரிப்பது குறித்த வலியுறுத்தல் நிச்சயமாக வரவேற்கத்தக்கதாகவே இருக்கிறது. ஆனாலும் உயர்கல்விக்கென்று அதிக அளவிலான பொது நிதிக்கான அழுத்தம் என்பது முதன்முறையாக இப்போது வருவதாக இருக்கவில்லை. 1966ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கோத்தாரி குழுவின் அறிக்கை, அதற்குப் பின்னர் வெளியான 1986 புதிய கல்விக் கொள்கை, 1992ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட செயல்திட்டம் ஆகிய கல்விக் கொள்கை குறித்த சிந்தனைகளிலும் இவ்வாறான அழுத்தம் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. ஆனால் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கொள்கைப் பரிந்துரையை பல்லாண்டுகளாக அலட்சியம் செய்தே வந்திருக்கின்றன. வெறுமனே கோரிக்கைக்கான அழுத்தத்தை தருவது மட்டுமே பாராட்டுதலுக்கான தகுதியற்றது என்பதை அவர்கள் காட்டிய அலட்சியம் நிரூபித்திருக்கின்றது.  

கல்வித் துறைக்குத் தேவைப்படுகின்ற கூடுதல் நிதிகளின் அளவை பிரிவு A1.4.1 விவரிக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஒட்டு மொத்த துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் தற்போதைய பொதுசெலவினங்களில் 10 சதவீதத்திலிருந்து (மத்திய மற்றும் அனைத்து மாநிலங்கள் உட்பட) 20.9 சதவீதமாக உயரும் என்பதாக இந்த வரைவு எதிர்பார்த்தாலும், உயர்கல்விக்கான நிதியின் தேவை இன்னும் அதிக அளவிலேயே இருக்கும் என்பதே நிஜம். இந்த வரைவில் முன்மொழியப்பட்டுள்ள நிதி அதிகரிப்பின் அளவைக் கருத்தில் கொண்டு பார்த்தால், ஏற்படக் கூடிய கூடுதல் செலவினத்திற்கான நிதியாதாரங்களை அடையாளம் காண வேண்டியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இந்த வரைவு பட்டியலிடுகின்ற வருவாய் அதிகரிப்புக்கான சாத்தியங்களைக் கொண்ட ஆதாரங்களின் பட்டியல் தவறான கணக்கீடுகளைக் கொண்டதாகவே இருக்கின்றது.  நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கேற்ற வகையில் வரியை கணிசமாக உயர்த்துவது, தீர்வை வரிகளை வசூலிப்பது என்ற மூன்று வழிமுறைகளை அடுத்தபத்தாண்டுகளில் கூடுதல் நிதி வளங்களைப் பெறுவதற்கான வழிமுறைகளாக இந்த வரைவு குறிப்பிடுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஐந்தாண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது. அதனை மீட்டெடுக்கப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையே இன்னும் நீடித்து வருகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்புகள் மிகக் குறைந்த அளவைத் தொட்டுள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கேற்ற வரிவிதிப்பு விகிதம், கடந்த பத்தாண்டுகளில் எதிர்பார்க்கப்பட்ட 10சதவிகிதம் என்பதற்குப் பதிலாக, 5.67 சதவிகிதமே அதிகரித்திருக்கின்றது. 11 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் உயர்கல்விக்கென்று வசூலிக்கப்பட்ட 94,036 கோடி ரூபாய் மதிப்புள்ளதீர்வை வரி முழுமையாகப் பயன்படுத்தாமலும், ஒதுக்கீடு செய்யப்படாமலும் தேங்கிக் கிடக்கிறது. இவ்வாறான நிலைமையில், இந்த வரைவு தந்திருக்கும் நிதி குறித்த விரிவான பரிந்துரைகளின் விளைவுகளைக் கணிப்பதற்கு சிறப்பு அறிவு எதுவும் நிச்சயமாகத் தேவைப்படாது.  

தன்னாட்சி

இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு, திரும்பத் திரும்ப தன்னாட்சி உரிமை குறித்து வலியுறுத்துவதன் மூலம், கல்வி நிறுவனங்களுக்கான பொது நிதி, கடுமையான ஒழுங்குமுறை ஆகியவற்றின் மீது இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்ற உண்மையான அர்ப்பணிப்பு குறித்த நமது சந்தேகம் வலுப்படுகிறது. தன்னாட்சி என்பது கல்விசார் தன்னாட்சி, நிர்வாகம்சார் தன்னாட்சி, நிதிசார் தன்னாட்சி என்ற மூன்று கூறுகளுடன் இருக்க வேண்டும் என்று பிரிவு 17.1.20 சொல்கிறது. இந்த ஒவ்வொரு வகையான தன்னாட்சியின் செயல்பாடுகளும் எவ்வாறிருக்கும் என்பது பற்றி தெளிவான குறிப்புகள் இந்த வரைவால் குறிப்பிடப்படாமல் விடுபட்டு இருக்கின்ற நிலையில், நிதிசார் தன்னாட்சி குறித்து இந்த வரைவுக்குள் இருக்கின்ற அறிவிப்புகள் மிகவும் கவலை தருவதாகவே இருக்கின்றன.

உயர்கல்வியில் தன்னாட்சி குறித்த தனது கலந்துரையாடலை ”'தன்னாட்சி என்பது 'பொது நிதியைக் குறைப்பது' என்பதாகவே அண்மைக்காலங்களில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் தன்னாட்சி என்பதற்கான உண்மையான பொருள் அவ்வாறு இருக்கக் கூடாது” என்றே இந்த வரைவு தொடங்குகிறது, ஆனாலும் அவ்வாறான சந்தேகங்களை முற்றிலும் களைவதற்கான பரிந்துரைகளை எந்தவொரு இடத்திலும் இந்த வரைவு குறிப்பிடாததால், அதுவே நோக்கமாக இருக்கின்றபட்சத்தில் தன்னாட்சியை பொதுநிதியுடன் இணைத்துப் பார்க்கின்ற போக்கு ஒருபோதும் அகலப் போவதில்லை.

”கற்பித்தல், பிற சேவைகள், உபகரணங்கள், ஆய்வுகளுக்குத் தேவையான நிதியை அந்தந்த நிறுவனங்களின் தேவைகளுக்கேற்றவாறு தீர்மானிக்கின்ற வகையில் அதிக அளவிலான நிதிசார் தன்னாட்சியை காலப்போக்கில் வழங்கலாம்” என்ற பரிந்துரையை முன்வைத்து விட்டு, “நிதிசார் தன்னாட்சி என்பது நிதியைக் குறைப்பதைக் குறிக்காது, மாறாக கல்வியின் மூலமாக உருவாகப் போகின்ற சாதனைகளை அதிகரிப்பதற்காக சிறந்த முறையில் நிதியை எவ்வாறெல்லாம் செலவழிப்பது என்பதைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரம்” என்று பிரிவு 9.3இல் நிதிசார் தன்னாட்சி என்பதை இந்த வரைவு விளக்குகிறது. நிதி அளிக்கப்படும். ஆனல் அதை எவ்வாறு செலவழிப்பது என்பது தன்னாட்சிக்கு உட்பட்டது என்கிறது இந்த வரைவு.

ஆனால், அடுத்து வருகின்ற அத்தியாயத்திலேயே இந்த விளக்கத்தை அந்த வரைவு பொய்யாக்கி விடுகிறது. “அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் படிப்படியாக கல்வி சார்ந்த, நிர்வாகம் சார்ந்த, இறுதியில் நிதி சார்ந்த முழுமையான தன்னாட்சியை நோக்கி நகரும்” என்று பிரிவு 10.1.cஇல் குறிப்பிட்டுச் சொல்லி விட்டு, ”பொதுநோக்குடன் செயல்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் பொது உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையாக நடத்தப்படும்” என்ற அழுத்தத்தைத் தருகிறது. தன்னாட்சி என்ற போர்வையில் நிதிக் குறைப்பு எதுவும் இருக்கக் கூடாது என்ற எச்சரிக்கைகளுக்கு மாறாக, நிதிசார் தன்னாட்சி என்பது இந்த வரைவின் பார்வையில், பக்கச்சார்பற்றதாக பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியாகப் பொருந்துவதாக இருப்பது தெளிவாகிறது. இவ்வாறு தனியர் கல்வி நிறுவனங்களின் மீது தரப்படுகின்ற அழுத்தத்திற்கான உண்மையான பொருள் பொது உயர்கல்வி நிறுவனங்கள் இனிமேல் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக நடத்தப்படும் என்பதாக அல்லது இந்த இருவகை நிறுவனங்களுக்கிடையே முழுக்க முழுக்க தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் என்பதே வரப் போவதே இல்லை. ஆய்வு நிதியுதவி குறித்து இந்த வரைவு வழங்கியிருக்கின்ற பரிந்துரையைப் பார்த்தாலே இந்தப் பரிந்துரையின் விளைவுகள் மிக எளிதில் விளங்கி விடும்.

தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற 500 பேருக்கு ஆய்விற்கான நிதியுதவிகளையும், 500 பேருக்கு ஆய்விற்குப் பிந்தைய நிதியுதவிகளையும் புதிதாக அமைக்கப்படவுள்ள தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை 2040ஆம் ஆண்டு வரை வழங்கும் என்று இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை மூலமாக ஆய்வு நிதியைப் பெறுகின்ற உரிமை தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இருப்பதாகவும்  இந்த வரைவு கூறுகிறது.

மௌலானா ஆசாத் தேசிய நிதியுதவி (1000), பட்டியலின (2000), பழங்குடியின (750) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (300) மாணவர்களுக்கான  தேசிய அளவிலான நிதியுதவி என்று சமூக அறிவியல் மற்றும் மனித வாழ்வியல் துறையில் ஆய்வு மேற்கொண்டு வரும் 4050 பிஎச்டி ஆய்வு மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு தற்போது நிதியுதவி அளித்து வருகிறது. இது தவிர அறிவியல் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் தொழில் ஆய்வு கழகம், வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம், அணு ஆற்றல் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், இந்திய சமூக அறிவியல் கழகம், இந்திய வரலாற்று கழகம், இந்திய தத்துவவியல் கழகம் என்று பல்வேறு அமைப்புகளும் ஆய்வு மாணவர்களுக்கான உதவித்தொகையை அளித்து வருகின்றன. எவ்வாறாயினும் குறைந்தபட்சம் 5000 ஆய்வு மாணவர்களுக்கு ஆய்வுகளுக்கான நிதியுதவி கிடைத்து வருகிறது. இந்த வரைவு பரிந்துரைக்கின்ற புதிய கல்விக் கொள்கையில் இந்த நிதியுதவிகள் இல்லாமல் போய் விடுமா? வெறுமனே 1000 பேருக்கு மட்டும் நிதியுதவி அளிக்கப் போவதாக கூறுவதன் முலம் பாதிக்கப்படப் போவது யார்? தனியார் கல்வி நிறுவனங்களும் இதன் மூலம் பலனடையப் போவதால், ஒருவேளை பலனடையப் போகின்ற பெரும்பாலானோர் தனியார் கல்வி நிறுவனங்களில் இருப்பவர்களாகி விட்டால், பொது கல்வி நிறுவனங்களில் ஆய்வுகளின் கதி என்னவாகும்?

மேலும் முக்கியமான ஆய்வுத் திட்டங்களுக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும் என்று கூறுவதன் மூலம் முக்கியமானவை என்பதை யார் தீர்மானிக்கப் போவது? அதற்கான அளவுகோல்கள் என்ன? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆய்வுகளை குறைப்பதற்கான வழிமுறையாக இவ்வாறு கூறப்படுகிறதா? சமூக அறிவியல், வரலாறு, தத்துவம் போன்ற இயல்கள் குறித்து இயங்கி வருகின்ற தேசிய அளவிலான அமைப்புகள் பற்றிய எந்தக் குறிப்பும் வரைவில் இல்லை. இந்த அமைப்புகளெல்லாம் மறைந்து போகப் போகின்றனவா? 

”இந்த ஆய்வு நிதியுதவி கிடைக்கப் பெறுபவர்கள் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை தேர்ந்தெடுத்துத் தருகின்ற குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட ஆய்வுகளைச் செய்து வருகின்ற குழுவினருடன் இணைந்து தங்களுடைய ஆய்வுகளை மேற்கொள்ளலாம். மாநிலப் பல்கலைக்கழகங்களில் அவ்வாறு ஆய்வு மாணவர்களைச் சேர்த்துக் கொள்கிற ஆய்வு மையங்கள் என்ற தகுதியை தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அனுமதி பெற்ற உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல், அந்த நிறுவனங்களில் நடைபெறுகின்ற ஆய்வுகள் குறித்த தகவலுடன் இந்த அறக்கட்டளையால் வெளியிடப்படும். இந்த அறக்கட்டளை ஆரம்பித்த ஓராண்டிற்குள்ளாக விதிமுறைகள் உருவாக்கப்பட்டு சுற்றுக்கு விடப்படும்” என்று இந்த வரைவின் பிரிவு 10.9இல் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறுகின்ற ஆய்வுகளை ஏதோ சதித் திட்டம் போலவும், அவற்றை முறைப்படுத்தி அவ்வாறு சதிச் செயல்கள் எதுவும் நடந்து விடாத வண்ணம் தடுப்பதற்காக திட்டமிட்டு செயல்முறைகளை உருவாக்கி இருப்பதாகவும் மட்டுமே இந்த பரிந்துரை இருக்கிறது. நிதியுதவி பெற்ர ஆய்வு மாணவருடன் ஏதாவதொரு நபரை நாங்களே துணைக்கு அனுப்பி வைப்போம் என்று மட்டுமே இந்த வரைவு கூறவில்லை.  

தொடர்ந்து "உள்ளூர் திறமைகளைச் செயல்படுத்தவும் ஊக்குவிக்கவும்" பல்கலைக்கழகங்களுடன் இணைவிக்கப்பட்ட கல்லூரிகள் எனும் முறையை படிப்படியாக அகற்றுவதற்கு ஆதரவாக அந்தப் பிரிவு வாதிடுகிறது. பன்னிரண்டு ஆண்டு கால அவகாசம் தரப்படும் என்று சகாயம் காட்டுகிறது. 2032ஆம் ஆண்டிற்குப் பிறகு இணைவிப்பு தருகின்ற பல்கலைக்கழகங்களோ அல்லது பல்கலைக்கழகங்களுடன் இணைவிக்கப்பட்ட கல்லூரிகளோ இருக்கப் போவதில்லை என்பதில் உறுதி காட்டுகிறது. ‘தன்னாட்சி’என்ற பெயரில் பல்கலைக்கழகங்களுடனான கல்லூரிகளின் இணைவிப்பு நீக்கப்படுவதன் தாக்கங்கள் என்னவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் கல்வியைத் தனியார்மயமாக்குகின்ற உந்துதல் இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவில் பெரிதாக வெளிப்படுகிறது.

“பொது உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான பொது நிதிகள் வழங்குவதில் உறுதியாக இருந்து, தொடர்ந்து நிலைத்தன்மையுடனும் உறுதியுடனும் நிதி வழங்கப்படுவதன் மூலம் நிதிசார் தன்னாட்சி நிலைமை அடையப்படும். கல்வி நிறுவன வளர்சிக்கான நீண்ட கால திட்டங்களின் மூலமாக கல்வி சார்ந்த அனைவரையும் ஒருங்கிணைப்பதன் மூலம் எட்டபப்டும்.”என்று பிரிவு 17.1.20.c கூறுகிறது. இந்தப் பிரிவில் தன்னாட்சி என்பதற்கான பொருள் கூறாமல் தவிர்க்கப்படுகின்றது.

ஆனாலும் பின்னர் இதுபோன்ற நிறுவனங்கள் முழு நிதிசார் தன்னாட்சியை அடையும் வரையில் பொது நிதியுதவிக்கான அர்ப்பணிப்பு என்பது தற்காலிகமானதாக இருக்கும் என்பதாக மட்டுமே தெரிவிக்கப்படுகிறது. முழுமையான தன்னாட்சி பெற்று விட்ட நிறுவனம், தன்னிடம் இருக்கின்ற நிதிகளை நிர்வகிக்கும் வழிகளைப் பற்றி இந்த வரைவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சமீபத்தில் சுயநிதிக் கல்வியில் உள்ள குறைபாடுகள், அவ்வப்போது உயர்த்தப்படும் கட்டணம் குறித்து எழுந்து வரும் சர்ச்சைகளின் அடிப்படையில் பார்த்தால், இந்த நிதிசார் தன்னாட்சி வழங்கப்படும் போது கல்வி நிறுவனங்கள் எவ்வாறு செயல்படும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவ்வாறு செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தெளிவான குறிப்புகள் எதுவும் வரைவில் இல்லை எனும் போது, அந்த செயல்பாடுகள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகள் குறித்த விவாதத்திற்கு வரைவில் இடம் எங்கே இருக்கப் போகிறது?

நிதிசார் தன்னாட்சியை நோக்கிய உந்துதலை, உள்ளூர் வளங்களின் மேலாண்மை என்பதாகக் காட்டி இந்த கொள்கை அறிக்கை கொண்டாடுகிறது, நாட்டின் பொருளாதாரம் நிதி நெருக்கடிகளுக்குள்ளாகி இருக்கும் தற்போதைய நிலைமையில், பொது நிதிக்கான போதுமான ஆதாரங்கள் குறித்த தெளிவான மற்றும் உறுதியான கருத்துக்கள் இல்லாததால், இந்த நிதிசார் தன்னாட்சிக்கான உந்துதல் கல்வி நிறுவனங்களுக்கான சுதந்திரத்தை வழங்குதல் என்பதோடு இணைந்து கொள்கிறது.

“தங்களது புதுமையான, தனிப்பட்ட சொந்த பாணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம்… அவர்களிடம் உள்ள நிபுணத்துவத்தையும், மாணவர்களின் தேவைகளைப் பற்றி அவர்களிடம் இருக்கின்ற அறிவையும் கணக்கில் எடுத்துக்கொள்வது.” என்று கூறி “ஆசிரியர்களின் தன்னாட்சி” பற்றியும் இந்த அறிக்கை சிறப்பாகச் சொல்கிறது (பிரிவு 13.1). தன்னாட்சியைப் பற்றிய மிகைப்படுத்தலை உருவாக்குகின்ற இந்த கல்விக் கொள்கையில், "ஆசிரியர் தன்னாட்சி" எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது பற்றி சிறிதளவுகூட குறிப்பிடப்படவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்களால் தரப்படுவதாக கூறப்படுகின்ற நிர்வாகம் மற்றும் கல்விசார் தன்னாட்சி என்பவற்றை, அவை எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளன என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தாலே, ஆசிரியர் தன்னாட்சி என்பது எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. ஆசிரியர்களின் தன்னாட்சி கல்வி நிறுவன நிர்வாகிகளின் நலன்களுக்கு சேவை செய்யும் விதத்திலே கையாளப்படுவதாகவே இருக்கும்.

தரநிலைப்படுத்தப்பட்ட தன்னாட்சி

உயர்தர நிறுவனங்கள் முதலில் தன்னாட்சி பெறுகின்ற வகையில் முன்வைக்கப்பட்டு ஏற்கனவே விமர்சிக்கப்பட்ட ‘தரநிலைப்படுத்தப்பட்ட தன்னாட்சி’முன்மாதிரியின் மீதே, தன்னாட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்ற இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு சாய்ந்து விடுகிறது. 2018 பிப்ரவரியில் பல்கலைக்கழக மானியக் குழுவால் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகளில் 'தரநிலைப்படுத்தப்பட்ட தன்னாட்சி' எனும் வாசகம் முதன்முதலாக உச்சரிக்கப்பட்டது. குறைபாடுகள் நிறைந்த அங்கீகார செயல்முறைகளின் மூலமாக 'உயர் செயல்திறன்' கொண்ட நிறுவனங்களாகத் தீர்மானிக்கப்படுகின்ற நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்குவது, ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரங்களைக் குறைத்தல், அரசு வழங்குகின்ற நிதியைத் திரும்பப் பெறுதல் போன்ற "வெகுமதிகள்" வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவால் வெளியிடப்பட்ட அந்த 2018ஆம் ஆண்டைய ஒழுங்குமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே முன்மாதிரியை இப்போது தேர்ந்தெடுத்து, “தற்போதுள்ள கல்லூரிகள் ஒவ்வொரு கட்டமாக பத்தாண்டுகளுக்குள் அங்கீகாரம் பெற்று, தன்னாட்சி பெறுகின்ற திட்டம் அமல்படுத்தப்படும். ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரிகளுக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்குள் பொருத்தமான தரப்படுத்தப்பட்ட தன்னாட்சி வழங்கப்படும்” என்று இந்த வரைவின் பிரிவு 18.2.2, கூறுகிறது.

உயர்கல்வி நிறுவனங்களின் தரப்படுத்தப்பட்ட வகைப்பாட்டை, 'வகை 1' (ஆய்வு பல்கலைக்கழகங்கள்), 'வகை 2' (கற்பித்தல் பல்கலைக்கழகங்கள்), 'வகை 3' (கல்லூரிகள்) நிறுவனங்களாக மாற்றி "உயர்கல்விக்கான புதிய நிறுவனக் கட்டமைப்பை" இந்த கொள்கை வரைவின் பிரிவு 10.3 முன்மொழிகிறது, இவ்வாறு உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தி விட்டு, "இது எந்தவொரு இயற்கையான வழியிலும் கூர்மையான, விலக்கி வைக்கின்ற வகைப்படுத்தல் அல்ல, ஒன்றுக்கொன்றுடன் தொடர்ச்சி கொண்டவை" என்ற மறுப்பை தொடர்ந்து வெளியிடுகிறது. இருந்தாலும், இந்த மூன்று 'வகை' நிறுவனங்களின் செயல்பாடுகளின் தன்மை, அளவு ஆகியவற்றின் மூலம் அவற்றின் தரம் வேறுபட்டு இருப்பது நன்றாகவே தெரிகிறது. மேலும், இந்த உயர்கல்வி நிறுவனங்கள் கீழிருக்கும் ‘வகையிலிருந்து’ உயர்ந்த ‘வகைக்கு’ செல்ல முயற்சிப்பது விரும்பத்தக்கது என்று இந்த வரைவு கருதுவதன் மூலம், ‘தரம்’என்பதன் மூலமே அத்தகைய கட்டமைப்பு நிர்வகிக்கப்படப் போகிறது எனும் தர்க்கம் நிரூபிக்கப்படுகிறது. இந்த 'தரம்' என்பது நிறுவனத்தின் தரம் குறித்ததாகவே இருக்கிறது. ”மூன்று வகையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு வெவ்வேறு பொருத்தமான விதிமுறைகளை அங்கீகாரம் வழங்குகின்ற அமைப்பு உருவாக்கிப் பயன்படுத்தும்” என்று அதே பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம், வெவ்வேறு 'வகை’ நிறுவனங்களின் ஆளுகைக்காக வெவ்வேறு மாறுபட்ட கட்டமைப்புகள் அமைக்கப்படும் என்பதாகவே தெரிகிறது.

பொது நிதிக்கான தொடர் தன்மை, அதற்காக அரசாங்கத்திடமிருக்கின்ற நேர்மையற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த பிரிவு உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக வகை 1 & 2 கல்வி நிறுவனங்களை அதிக செயல்திறனை நோக்கித் தள்ளுகின்ற வகையிலேயே அரசாங்க நிதியுதவி இருக்கும், “நிறுவனங்களின் திறன் மற்றும் நேர்மை குறித்தான நம்பிக்கை நிறுவப்படும் போது நிதிசார் தன்னாட்சி வழங்கப்படும்” என்று பிரிவு 17.1.20.d தெளிவாகக் குறிப்பிடுவதன் மூலம், இந்த நிறுவனங்கள் காலப்போக்கில் அத்தகைய நிதியை நிச்சயம் இழக்க வேண்டியிருக்கும் என்பது தெளிவாகிறது.

தன்னாட்சி குறித்து மூன்று பகுதிகளாக விளக்கங்களைத் தருகின்ற இந்த கொள்கை வரைவு, தரநிலைப்படுத்தப்பட்ட தன்னாட்சி என்பது எதைக் குறிக்கும் என்று சொல்வதை மட்டும் தவிர்த்து விடுகிறது. எடுத்துக்காட்டாக, கல்விசார் தன்னாட்சி என்ற தலைப்பின் கீழ், தன்னாட்சி பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்கள் பணிநியமனத்திற்கு தங்களுடைய சொந்த விதிகளை வகுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எந்தவொரு ஒழுங்குமுறை அமைப்பின் முன் அனுமதியுமின்றி, தன்னாட்சி நிறுவனங்கள் (வகை I மற்றும் II பல்கலைக்கழகங்கள்) தங்கள் சொந்த நிர்வாக குழுக்கள் / சட்டரீதியான அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு வெளிநாட்டு ஆசிரியர்களை பணியிலமர்த்த அனுமதித்து கடந்த ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட விதிமுறைகளுக்கே இது திரும்பிச் செல்வதாக இருக்கிறது. இந்த நடவடிக்கை பல்கலைக்கழக ஆசிரியர்களிடையே உள்ள கல்வி மற்றும் நிதி சார்ந்த சமத்துவத்தை சீர்குலைத்து, ஏற்கனவே இருந்து வருகின்ற பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை இல்லாமல் செய்து விடும் என்று அப்போது அந்த விதிமுறைகள் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் முன்வைக்கப்படாது என்பது குறித்து எந்த உறுதியும் இந்த வரைவில் தரப்படவில்லை.

உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்களுடைய வளாகங்களை இந்தியாவில் திறக்க வரைவில் உள்ள பிரிவு 12.4.11 அனுமதி வழங்குகிறது. சமத்துவம், சமூகநீதி தொடர்பான எந்தவொரு கொள்கை அர்ப்பணிப்பும் இல்லாத தனி ‘உலகத் தரம் வாய்ந்த’ வெளிநாட்டு நிறுவனங்களையே இது உருவாக்கும்.  உண்மையில் இந்தப் பிரிவு, உயர்கல்வித் துறையில் வணிகத்தை எளிதாக்க வேண்டுமென்ற உலக வர்த்தக அமைப்பின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக இருக்கிறது. "சட்டத்திற்குட்பட்ட நுழைவுக்கு வசதியான கட்டமைப்பிற்கான" ஆதரவுக் குரலை எழுப்புகின்ற இந்த வரைவு, பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் கடுமையாக எதிர்க்கப்பட்ட வெளிநாட்டு கல்வி வழங்குநர்கள் மசோதா 2013இன் விதிமுறைகளை மீண்டும் திறம்படக் கொண்டு வந்து நிறுவுகிறது.

உயர்கல்வி நிறுவனங்களை மூன்று தரங்களாகப் பிரித்தல், துரிதமாகச் செயல்படுகின்ற அங்கீகார செயல்முறைகள், தன்னாட்சியை எளிதாக்கும் வகையிலான செயல்முறையைப் பின்பற்றுவதற்காக கூறப்படுகின்ற காரணங்கள், போட்டிகள் நிறைந்த வணிகப் பொருளாதாரத்திற்கான உந்துதல், போதுமான பொது நிதியை வாங்குவதற்கான வழிமுறைகள் குறித்து இருக்கின்ற தெளிவற்ற அறிக்கைகள் என்று இவையனைத்தையும் உள்ளடக்கிய இந்த கொள்கை வரவறிக்கையின் அடிப்படையில் 'தரநிலைப்படுத்தப்பட்ட தன்னாட்சி' அமைவது தெளிவாகத் தெரிகிறது. உண்மை அவ்வாறாக இருக்குமேயானால், உயர்கல்வியில் அரசாங்கத்தின் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து இந்த வரைவில் இருக்கின்ற உரத்த அறிவிப்புகள் அனைத்தும் நம்மைத் தவறாக வழிநடத்துபவையாகவே இருக்கப் போகின்றன.  

கட்டுரையாளர்:முனைவர் தா.சந்திரகுரு

விருதுநகர்