இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் 2019 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புக்கள் பரவலாகியதன் விளைவாக, 144 பிரிவின் கீழ் தடை உத்தரவுகளும், இணைய முடக்கமும் அன்றாட நிகழ்வுகளாகியுள்ளன. இந்த சட்டத் திருத்தம் மற்றும் அதனோடு தொடர்புடைய மக்கள் தொகை பதிவேடு (பிஆர்), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.ஐ.சி) ஆகியவற்றின் பொருள் மற்றும் உட்குறிப்பு குறித்து மக்களிடையே ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன.
ஏற்கனவே அரசிதழில் வெளியாகி இருக்கின்ற அறிவிப்புகள், சட்டங்கள், விதிகள் ஆகியவற்றின் மூலம் இவற்றின் தாக்கங்கள் மற்றும் அவற்றிற்கிடையிலான தொடர்புகள் குறித்து இங்கே தரப்படுகிற ஆய்வு, எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு முன்பாக, இப்போது ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை அகற்ற முயல்கிறது.
கட்டுக்கதை 1: தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதற்குமாக அறிவிக்கப்படவில்லை.
உண்மை: இது அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஜூலை 31 அன்று வெளியான அரசிதழ் அறிவிப்பில், நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. "குடியுரிமை (குடிமக்களை பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல்) விதிகள் - 2003இன் விதி 3இன் துணை விதி(4)ஐப் பின்பற்றி, மக்கள் தொகை பதிவு (பிஆர்) மற்றும் அசாம் தவிர நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று உள்ளூர் பதிவாளரின் அதிகார எல்லைக்குள் பொதுவாக வசித்து வருகின்ற அனைத்து நபர்கள் தொடர்புடைய தகவல்களைத் தயாரிக்கவும், மேம்படுத்தவும் தேவைப்படுகின்ற களப்பணி 2020 ஏப்ரல் 1 முதல் 2020 செப்டம்பர் 30 வரை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு இதன் மூலம் முடிவு செய்கிறது"
படம் 1: தேசிய குடிமக்கள் பதிவேடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு என்பதாக அழைக்கப்படுகிறது.
படம் 2: 2003 விதிகளில் உள்ள விதி 3
இது நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு அறிவிக்கப்படவில்லை என்ற அறிவிப்பின் மீதுள்ள சந்தேகங்களை நீக்குவதாக இருக்கிறது.
அசாமுடன் நேரடியாக தொடர்புடைய மற்றும் 1985ஆம் ஆண்டு அசாம் ஒப்பந்தம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இவையிரண்டையும் வேறுபடுத்துவதற்காக அசாமை விலக்கி வைத்து விட்டு, தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு என்பதாக அது அழைக்கப்படுகிறது.
கட்டுக்கதை 2: மக்கள் தொகை பதிவேடும், தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடும் ஒன்றுக்கொன்றுடன் தொடர்புடையவை அல்ல.
உண்மை: அவை இரண்டும் ஒன்றுக்கொன்றுடன் தொடர்புடையவை.
அரசிதழில் வெளியான "மக்கள் தொகை பதிவேடு" என்பது தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பிற்கான முதல் படியையே குறிக்கிறது. "மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள நபர்களின் விவரங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பிறகு, அவை இந்திய குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டில் ஏற்றப்படும்" என்று 2003 விதிகளில் உள்ள விதி 3இன் துணை விதி(5) கூறுகிறது:
படம் 3: மக்கள் தொகை பதிவேடு / தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு / தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கிடையிலான தொடர்பு
மக்கள் தொகை பதிவேட்டிற்காக 2020 ஏப்ரல் 1 முதல் 2020 செப்டம்பர் 30 வரை வீடு வீடாக கணக்கீடு மேற்கொள்ளப்படும் என்றும் அரசிதழ் அறிவிப்பு தெளிவுபடுத்தியுள்ளது. மக்கள் தொகை பதிவேட்டின் "முறையான சரிபார்ப்பிற்குப் பிறகு" அது தயாரிக்கப்படும் என்று துணை விதி(5) குறிப்பிடுவதால், இது தேசிய இந்திய குடிமக்கள் பதிவேட்டிற்கான முதல் படியேயாகும்.
மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன?
"மக்கள் தொகை பதிவேடு என்பது பொதுவாக ஒரு கிராமம், கிராமப்புறப் பகுதி, நகரம், வார்டு அல்லது குடிமக்கள் பதிவு பதிவாளர் ஜெனரலால் எல்லை வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் உள்ள நகரம் அல்லது நகர்ப்புற வார்டுக்குள் வசிக்கும் நபர்களின் விவரங்களைக் கொண்ட பதிவேடு" என்று மக்கள் தொகை பதிவேட்டை குடியுரிமை (குடிமக்களின் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் வெளியீடு) விதிகள் - 2003 வரையறுக்கிறது:
"தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு என்பது இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியேயும் வாழும் இந்திய குடிமக்களின் விவரங்களைக் கொண்ட பதிவேடு" என்று தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு பற்றி அது குறிப்பிடுகிறது. தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு நான்கு துணைப் பகுதிகளாக பிரிக்கப்படும்: (அ) இந்திய குடிமக்களின் மாநில பதிவேடு (ஆ) இந்திய குடிமக்களின் மாவட்ட பதிவேடு (இ) இந்திய குடிமக்களின் துணை மாவட்ட பதிவேடு மற்றும் (ஈ) இந்திய குடிமக்களின் உள்ளூர் பதிவேடு. மேலும் அவ்வப்போது குடிமக்கள் பதிவு பதிவாளர் ஜெனரலுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு குறிப்பிடும் விவரங்களை அது கொண்டிருக்கலாம்" (விதி 3).
மக்கள் தொகை பதிவேடு எவ்வாறு தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடாக மாற்றப்படும்?
விதி4 இன் துணை விதி(3) பின்வருமாறு கூறுகிறது: இந்திய குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டை தயாரித்து அதில் சேர்ப்பதற்காக, குடிமக்கள் பதிவு பதிவாளர் ஜெனரலால் குறிப்பிடப்படுகின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் உதவியுடன் உள்ளூர் பதிவாளரால் மக்கள்தொகை பதிவேட்டில் ஒவ்வொரு குடும்பம் மற்றும் தனிநபர் குறித்து சேகரிக்கப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு ஆராயப்படும் ".
"சந்தேகத்திற்குரிய குடியுரிமையை" அடையாளம் கண்டு சரிபார்ப்பதற்கான செயல்முறை இன்னும் அறிவிக்கப்படவில்லை
இத்தகைய சரிபார்ப்பு மற்றும் ஆய்வுச் செயல்பாடுகளின் போது என்ன நடக்கும் என்பதை 2003ஆம் ஆண்டு விதிகளில் உள்ள விதி 4இன் துணை விதி(4) நன்றாகத் தெளிவுபடுத்துகிறது: இந்த "சரிபார்ப்புச் செயல்பாட்டின் போது, குடியுரிமை குறித்து சந்தேகத்திற்குரிய நபர்களின் விவரங்கள் உள்ளூர் பதிவாளரால் பொருத்தமான குறிப்புகளுடன் மேலதிக விசாரணைக்காக மக்கள் தொகை பதிவேட்டில் ஏற்றப்படும். சந்தேகத்திற்குரிய குடியுரிமை என்று அறியப்பட்டால், சரிபார்ப்பு செயல்முறை முடிந்த உடனேயே குறிப்பிட்ட படிவத்தின் மூலம் அந்த தனிநபர் அல்லது குடும்பத்தினருக்கு அது தெரிவிக்கப்படும்".
ஆக அந்த செயல்முறை தெளிவாக இருக்கிறது. அடுத்தகட்ட விசாரணைக்காக "சந்தேகத்திற்கிடமான குடிமக்கள்" மக்கள்தொகை பதிவேட்டில் குறிக்கப்படுவார்கள். பின்னர் குடும்ப உறுப்பினர்களுக்கு "குறிப்பிட்ட படிவத்தில்" அது தெரிவிக்கப்படும்.
(அ) எந்த அடிப்படையில் "சந்தேகத்திற்கிடமான குடிமக்கள்" அடையாளம் காணப்படுவார்கள் அல்லது குறிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை (ஆ) அந்த "குறிப்பிட்ட படிவம்" இன்னும் பொதுதளத்தில் இல்லை. இவையெல்லாம் தெளிவாக விளக்கப்பட்டு வெளியிடப்படும் வரை அந்த செயல்முறை மறைமுகமான ஒன்றாகவே இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் மற்றும் நடைமுறைகளையும் வழங்குவதாகவே 2003ஆம் ஆண்டு விதிகளின் நோக்கம் இருக்கிறது. குறிப்பிட்ட தெளிவான செயல்முறைகள் எதுவும் இல்லை என்பதால், உள்ளூர் அதிகாரிகளின் விருப்பங்கள், ஆர்வங்களுக்கேற்றவாறு தன்னிச்சையாக பாதிக்கப்படக்கூடியதாக இந்த திட்டம் இருப்பது தெளிவாகிறது. இது குறித்தும், தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு பற்றி 2019 ஜூலையில் வெளியான அரசிதழ் அறிவிப்பு குறித்தும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேசிய இந்திய குடிமக்கள் பதிவேட்டில் தங்களை சேர்ப்பது அல்லது விலக்குவது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக துணை மாவட்ட அல்லது குடிமக்கள் பதிவின் தாலுகா பதிவாளரிடம் "சந்தேகத்திற்குரிய குடிமக்கள்" முறையிடலாம் என விதி 4 இன் துணை விதி (5) கூறுவதன் மூலம் தன்னிச்சையான செயல்பாடுகள் இன்னும் அதிகரிக்கின்றன. மேலும் இதற்காகவோ அல்லது இதைப் பின்பற்றத் தேவைப்படுகின்ற செயல்முறைக்காகவோ எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படும் என்பதுவும் அந்த விதிகளில் குறிப்பிடப்படவில்லை.
இதற்கு நேர்மாறாக, அசாம் விஷயத்தில், வெளிநாட்டினர் தீர்ப்பாயத்திற்கு முன்பாகவும் அதற்கு அப்பாலும் மேல்முறையீடு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்பிற்குத் தேவையான செயல்முறை என்று அனைத்தும் நன்கு வரையறுக்கப்பட்டு வெளிப்படையாக இருந்தன.
கட்டுக்கதை 3: மக்கள் தொகை பதிவேடு / தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு ஆகியவை 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் பகுதியாக இருக்கும்.
உண்மை : இல்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வேறுபட்டது
தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு செயல்பாட்டில் அடுத்ததாக "ஏதேனும் ஆட்சேபணைகளை கோருவதற்காக அல்லது சேர்ப்பதற்காக என்று துணை மாவட்ட அல்லது தாலுகா பதிவாளரால் இந்திய குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டின் வரைவு வெளியிடப்படும்" என்று 2003ஆம் ஆண்டு விதிகளில் உள்ள விதி 4 இன் துணை விதி (6) (அ ) குறிப்பிடுகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கபப்டும் நபர்களின் பெயர்கள், அவர்களுடைய முகவரி அல்லது பிற விவரங்கள் போன்ற விவரங்கள் வெளியிடப்படாது மட்டுமின்றி அவை வேறு எந்த செயல்முறைக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் 1948 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் என்ற வேறு சட்டத்தின் மூலமாகவே மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் மக்கள் தொகை பதிவேடு / தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு ஆகியவை 1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம், 2003ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் 2003ஆம் ஆண்டு விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுக்கதை 4: மக்கள் தொகை பதிவேடு / தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு ஆகியவை ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
உண்மை: இல்லை. இவை வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 2003 சட்டத் திருத்தத்திலிருந்தே தொடங்கின.
1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்திற்குள் மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு ஆகியவை எப்போது, எப்படி வந்தன? (அ) "சட்டவிரோதமாக குடியேறியவர்" மற்றும் (பி) தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதற்காக 2003 ஆம் ஆண்டில் இருந்த முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டமானது 2003 ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலமாகவே திருத்தப்பட்டது.
2003 ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்த சட்டத்தின் பிரிவு 2 இவ்வாறு கூறுகிறது:" (i) செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பிற பயண ஆவணங்கள் இல்லாமல் மற்றும் எந்தவொரு சட்டத்தாலும் அல்லது அதன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பிற ஆவணங்கள் அல்லது அதிகாரம் இல்லாமல் இருக்கின்ற; அல்லது (ii) செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பிற பயண ஆவணங்கள் மற்றும் எந்தவொரு சட்டத்தாலும் அல்லது அதன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பிற ஆவணங்கள் அல்லது அதிகாரத்துடன் இருந்தாலும், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் தங்கியிருக்கின்ற" . வெளிநாட்டவர் ஒருவர் சட்டவிரோதமாக குடியேறியவர்" எனப்படுவார் (பிரிவு 2).
2003 ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் பிரிவு 14A சேர்க்கப்பட்டபோது தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு என்பது வந்து சேர்ந்தது.
2010-11ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தேசிய மக்கள் தொகை பதிவேடு செயல்முறை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஆதார் திட்டத்தில் (இந்தியர்களுக்கான தனித்துவமான அடையாளம்) ஈடுபாடு கொண்டதால், அது அடுத்த கட்டத்திற்கு முன்னேறவில்லை என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இதனையடுத்து, தேசிய மக்கள் தொகை பதிவேடு 2015ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது என்றாலும், அது தேசிய இந்திய குடிமக்கள் பதிவேட்டை நோக்கி முன்னேறிச் செல்லவில்லை.
மக்கள் தொகை பதிவேடு அல்லது தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவை இப்போதுள்ள குடியுரிமைச் சட்டத்தில் இல்லை
பிரதான சட்டமாக இப்போது நடைமுறையில் உள்ள 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில், 2003ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்திற்குப் பிறகும் மக்கள் தொகை பதிவேட்டைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்பது சுவாரஸ்யமானது.
அது 2003ஆம் ஆண்டு விதிகள் மூலமாகவே கொண்டு வரப்பட்டது.
தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு என்பது 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற போர்வையில் எவ்வாறு மாநிலத்தில் பின்புற கதவு வழியாக நுழைந்து பதுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மேற்கு வங்க சிவில் உரிமைகள் அமைப்பான ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தைச் (ஏபிடிஆர்) சார்ந்த ரஞ்சித் சுர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். அவர் பிரதான சட்டத்தில் அத்தகைய ஏற்பாடுகள் இல்லாததால், அதனை நாடு தழுவிய அளவில் அமல்படுத்துவதற்கான அதிகாரம் 2003ஆம் ஆண்டு விதிகள் மூலமாகவே கொண்டுவரப்பட்டது என்கிறார். இது தொடர்பாக பல வழக்கறிஞர்களையும் கலந்தாலோசித்ததாக கூறுகின்ற அவர், மற்றவர்களும் பிரதான சட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் இல்லை என்பதால் 200ஆம் ஆண்டு விதிகள் குறித்து தங்களுடைய சந்தேகத்தை தெரிவித்தனர் என்கிறார்.
ஏபிடிஆர் இந்த விஷயத்தை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான பணிகளை நிறுத்தி வைத்தார். பீகார், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா, கேரளா, டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் இப்போது இணைந்து தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர்.
கட்டுக்கதை 5: மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றிற்கிடையே எந்த தொடர்பும் இல்லை.
உண்மை: அவை அனைத்தும் ஒன்றுக்கொன்றுடன் தொடர்புடையவை. மேலும் அவை முஸ்லீம்களை வடிகட்டுகின்றன
நாடு முழுவதும் பரவலான எதிர்ப்புக்கள் எழுந்ததன் காரணமாக பின்வாங்கியதற்கு முன்பாக இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ச்சியாக பேசி வந்த பேச்சுக்களை ஒருவர் புறக்கணித்து விட்டு பார்த்தாலும், "சட்டவிரோதமாக குடியேறியவர்" என்பதன் மூலமாகவும், 2003ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்டதன் மூலமாகவும் ஒரு தெளிவான தொடர்பு இவற்றிற்கிடையில் நிறுவப்பட்டுள்ளது தெரிய வரும். சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 2019 குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்குவதைத் தவிர்ப்பதன் வழியாக, "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று அவர்களை மாற்றுகிறது.
இதற்கான அதிக சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன. மாநிலத்தில் உள்ள மாவட்ட நீதிபதி மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி(டி.எம் மற்றும் ஏ.டி.எம்)களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் பிசினஸ் டுடே பத்திரிக்கையால் பெறப்பட்டன. தொடர்புடைய பகுதிகள் படத்தில் சிவப்பு நிறத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. "தேசிய மக்கள் தொகை பதிவு -2020" தயாரிக்கும் போது மக்களிடமிருந்து பெற வேண்டிய தகவல்களை இந்த ஆவணம் கொண்டுள்ளது.
பக்கம் 2இல், நெடுவரிசை 3இல் "தந்தை மற்றும் தாயின் பிறந்த இடம், அது இந்தியாவுக்குள் இருந்தால், மாநிலம் மற்றும் மாவட்டத்தின் பெயரை எழுதுங்கள். இந்தியாவுக்கு வெளியே இருந்தால், நாட்டின் பெயரை எழுதவும் - மாவட்டத்தைப் பொறுத்த வரை பின்னர் நிரப்பிக் கொள்ளும் வகையில் அந்த இடத்தை காலியாக விடுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்லது.
படம் 4: மிகமோசமான பரிசு : தேசிய மக்கள் தொகை பதிவேடு -2020 "சட்டவிரோதமாக குடியேறியவர்களை" அடையாளம் காண முற்படுகிறது
தேசிய மக்கள் தொகை பதிவேடு - 2020இன் நோக்கம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பது என்பதாலேயே அது மிகமோசமான பரிசாக இருக்கிறது. இந்த வேலை முடிந்ததும், அனைத்து முஸ்லீம்களும் 2019 குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் வடிகட்டப்பட்டு நாடு முழுவதும் உள்ள தடுப்பு மையங்களில் வைக்கப்படுவார்கள்.
உண்மையில், மக்கள் தொகை பதிவேட்டை அறிவிக்கும் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் (2019 ஜூலை 31 அன்று), சட்டவிரோதமாக குடியேறியவர்களை குடியமர்த்துவதற்காக குறைந்தது ஒரு தடுப்புக்காவல் மையத்தை அமைக்குமாறு அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக முக்கிய தேசிய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டது.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு, இந்தியாவின் வேறு இடங்களில் தேசிய இந்திய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற முடியாமல் தோல்வி அடைபவர்களுக்கு அசாமில் 10, நவி மும்பையில் ஒன்று, பெங்களூர் நெலமங்களாவில் ஒன்று என்று மொத்தம் நாடு முழுவதும் குறைந்தது 12 தடுப்புக்காவல் மையங்கள் தயார் செய்யப்படுகின்றன.
தேவைப்படும் ஆவணங்கள் அல்லது தகவல்கள் 12, 14 அல்லது 15ஆ என்பது குறித்து தெளிவு இல்லை
மேலே காட்டப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு -2020இல் தந்தை மற்றும் தாய் பிறந்த இடம் பற்றிய தகவல்களை கேட்பது போன்று எதுவும் 2003ஆம் ஆண்டு விதிகளில் கேட்கபப்டவில்லை. 2003ஆம் ஆண்டு விதிகள் 12 தகவல்களை மட்டுமே கேட்கின்றன: "இது (மக்கள் தொகை பதிவேடு) பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், குடியிருப்பு முகவரி (தற்போதைய மற்றும் நிரந்தர), திருமண நிலை (திருமணம் செய்து கொண்டிருந்தால், மனைவியின் பெயர்), காணக்கூடிய வகையிலான அடையாளக் குறி, குடிமகனாகப் பதிவு செய்த தேதி, பதிவு வரிசை எண் மற்றும் விதி 13இன் கீழ் வழங்கப்பட்ட தேசிய அடையாள எண் என்று 12 விவரங்களைக் கொண்டிருக்கும் (2003ஆம் ஆண்டு விதிகளில் உள்ள விதி 3இன் துணை விதி 3).
ஆனால் மறுபுறம், இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் தேசிய மக்கள் தொகை பதிவேடு பற்றிய விவரங்களை வழங்குகின்ற வகையில் அதன் இணையதளத்தை மேம்படுத்தியுள்ளது. "தேசிய இனம்" உட்பட 15 தகவல்களை கேட்கிறது என்றாலும் தந்தை மற்றும் தாயின் பிறந்த இடத்தை அது கேட்கவில்லை.
தேசிய மக்கள் தொகை பதிவேடு -2020 செயல்முறை ஏற்கனவே இந்தியாவில் தொடங்கி விட்டது: இது தேசிய இந்திய குடிமக்கள் பதிவேட்டிற்கான முதல் படியாகும்
2019 ஜூலை 31 அன்று வெளியான அரசிதழ் அறிவிப்பு மட்டுமல்லாது தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் தொடக்கமும் செய்தித்தாள்கள் மூலமாக பரவலாக அறிவிக்கப்பட்டுள்ளது. "இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் ஏற்கனவே 1,200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 40 நகரங்கள் மற்றும் குறுநகரங்களில் 5,218 கணக்கீட்டுத் தொகுதிகள் மூலம் முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. மக்களிடமிருந்து அது பல்வேறு தரவுகளைச் சேகரித்து வருகிறது. இறுதிக் கணக்கீடு 2020 ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 2020 செப்டம்பரில் முடிவடையும்" என்று 2019 அக்டோபர் 11 அன்று வெளியான பி.டி.ஐ செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் "தேசிய பயிற்சியாளர்களுக்கான பயிற்சி 2019 அக்டோபர் 14 முதல் தொடங்க உள்ளது. அந்த பயிற்சியின் அட்டவணை குறித்து மாநில மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைப் போலவே, மாவட்ட நீதிபதி மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி (டி.எம் மற்றும் ஏ.டி.எம்)களுக்கான பயிற்சி டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது. அடிமட்டத்திலும் அதற்கு மேலாகவும் மற்ற அதிகாரிகளுக்கான பயிற்சியாளர்களாக இவர்கள் இருப்பார்கள்.
ஆக தேசிய குடிமக்கள் தொகை பதிவேடு அல்லது தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு / தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய்வற்றின் செயல்முறைகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை அல்லது தொடங்கப்படவில்லை என்று யாராவது சொன்னால், அது நிச்சயமாக உண்மை இல்லை. அந்த செயல்முறைகள் தொடங்கி விட்டன. வீடு வீடாக கணக்கெடுப்பது 2020 ஏப்ரல் முதல் தொடங்கவிருக்கிறது.
இவற்றிலிருந்து கிடைக்கின்ற முடிவுகள் மிகத் தெளிவாக உள்ளன. நாடு தழுவிய (அசாம் இல்லாத) தேசிய இந்திய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிக்கும் செயல்முறை தேசிய மக்கள் தொகை பதிவேடு -2020ஐத் தொடங்குவதன் மூலம் தொடங்கப்பட்டு விட்டது. 2019 தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்து விட்டது. இவையனைத்தும் சேர்ந்து முஸ்லீம்களை மட்டும் வடிகட்டப் போகின்றன. அவர்களைத் தங்க வைப்பதற்கான தடுப்புக்காவல் மையங்கள் தயாராகிக் கொண்டுள்ளன.
- தமிழில் முனைவர் தா.சந்திரகுரு விருதுநகர்