tamilnadu

img

பயணிகள் விமான கட்டண வரம்பை தாரைவார்த்துவிட்டு, தனியார் நிறுவனத்திடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசு - பி.ஆர்.நடராஜன் எம்.பி., கண்டனம்

கோவை, ஜூன் 7- உள்நாட்டு பயணிகளுக்கான விமான கட்டண வரம்பை தாரைவார்த்துவிட்டு, தற்போது தனியார் நிறுவனத்திடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழு தலைவர் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஒடிசாவில் நிகழ்ந்த பெரும் ரயில் விபத்துக்கு பிறகான நாட்களில், அப்பகுதியிலிருந்து இயக்கப்படும் பயணிகள் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் தம் குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் காரணமாக எழுந்த அழுத்தத்தையொட்டி, ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம், பயணிகள் விமான டிக்கெட் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய விமான சேவை நிறுவனங்கள் சில நெறிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும், என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, (கடந்தாண்டு டிச.15 ஆம் தேதியன்று) நாடாளுமன்றத்தில் விமான பயண டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து நான் கேள்வி எழுப்பினேன். அதாவது, “உள்நாட்டு விமான போக்குவரத்தின் மீது பயணச்சீட்டு கட்டண வரம்பினை விலக்கிக்கொள்வது பற்றி, சமீபத்தில் அரசு ஏதேனும் முடிவெடுத்து உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெனரல் டாக்டர் வி.கே.சிங், “விமான கட்டணங்களின் கீழ் வரம்பு மற்றும் மேல்வரம்பு ஆகிய இரண்டும் 31.8.2022 அன்றிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

உள்நாட்டு பயணிகள் விமான கட்டண வரம்பினை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, பயணிகளின் நலனுக்கேற்ற வகையில் கட்டணங்களை வைத்திருக்க முடிந்தது. மேலும். அரசுக்கு சொந்தமாக விமான நிறுவனம் இருந்தபோது, பேரிடர் காலங்களில் அவற்றை பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இலவசமாக பயன்படுத்த முடிந்தது. தற்போது, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, உள்நாட்டு பயணிகள் விமான கட்டண வரம்பினை நீக்கி, அவற்றை தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொடுத்துவிட்டது. இவ்வாறு செய்துவிட்டு, இப்போது இரட்டை நிலையில் ஒரு அறிக்கையை ஒன்றிய அமைச்சகத்தின் மூலம் வெளியிடுகிறது.

தனியார் விமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்நாட்டு பயணிகள் பயணச்சீட்டு விலை நிர்ணயத்தை அனுமதித்து இருக்கிற காரணத்தினால், பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்கள் மற்றும் பேரிடர் நேரங்களில் விமான டிக்கெட் விலைகளை தங்கள் விருப்பப்படி உயர்த்திக் கொள்கின்றனர். காலையில் ஒரு விலை, அதே பயணச்சீட்டு மாலையில் ஒரு விலை என கொள்ளையடிக்கும் கதவினை ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விட்டுள்ளது. இதனால் உள்நாட்டு விமான பயணிகள் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விலை நிர்ணயத்தை தனியாரிடம் விட்டு விட்டு, இப்போது அவர்களிடம் நெறிமுறைகளை வகுத்துக் கொள்ளுங்கள் என்று அரசு கெஞ்சிக்கொண்டு இருக்கிறது.

விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த முரண்பாடான செயலை கண்டிப்பதோடு, உள்நாட்டு பயணிகள் விமான கட்டண வரம்பை மீண்டும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.