tamilnadu

img

அடுத்த மாதம் முதல் புதிய முறையில் கேஸ் சிலிண்டர் விநியோகம்...

கோவை:
முறைகேடுகளை தடுக்க நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு புதிதாக ஓடிபி எண் முறையை நவம்பர் மாதத்தில் இருந்து அமலுக்கு கொண்டு வர இந்தியன் ஆயில் ( ஐஓசிஎல்)  நிறுவனம் முடிவு செய்துள்ளது. 
இந்த புதிய முறையை சோதனை அடிப்படையில் ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூர் மற்றும் தமிழ்நாட்டில் கோவை, சேலம் மாநகர பகுதியில் ஐஓசிஎல் நிறுவனம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுபற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘எல்பிஜி சிலிண்டர்களின் வீட்டு விநியோகம் தொடர்பான விதிகள் நவம்பர்  மாதம் முதல் மாறப்போகின்றன. முதலில் 100 ஸ்மார்ட் நகரங்களில் சிலிண்டர் வழங்க ஒரு முறை பயன்பாட்டு கடவுச்சொல் (ஓடிபி) வழங்கப்படும். இந்த ஓடிபி, சிலிண்டர் முன்பதிவு செய்தவுடன் அவர்களின் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். டெலிவரி மேனிடம் அதனை கூறினால் தான், சிலிண்டரை வழங்குவார். எரிவாயு சிலிண்டர், சரியான வாடிக்கையாளரை அடைவதே இந்த திட்டத்தின் நோக்கம். நவம்பரில் அமலுக்கு வரும் 100 மாவட்டங்களிலும் வெற்றி கண்ட பின், நாடு முழுவதும் முழுமையாக விரிவுப்படுத்தி அமலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தனர். 
சரியான முறையில் டவர் இல்லாத இடங்களில் ஓடிபி எண் கொண்ட குறுஞ்செய்தி, தொலைபேசிகளுக்கு சென்றடையாது. அதுவும் சிலிண்டர் விநியோகத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். முறைகேடுகளை தவிர்க்க கொண்டு வரப்படும் இத்திட்டம் நல்லது என்றாலும்,சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன என்று கேஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.