tamilnadu

img

கொரோனா: கட்டணத்தை குறைத்திடுக... தமிழக அரசுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்....

கோவை:
கொரோனா ஆய்வுக்கான பரிசோதனை கருவிகள் தற்போது தாராளமாக குறைந்தவிலையில் கிடைக்கும் நிலையில், ஆய்வுக்கட்டணம் மட்டும் தமிழகத்தில் குறையவே இல்லை. இதர மாநிலங்களைப்போல தமிழகத்திலும் கொரோனா ஆய்வுக் கட்டணத்தை குறைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என தமிழக அரசுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆர்.டி. - பி.சி.ஆர் ஆய்வுக்கு தமிழகத்திலுள்ள தனியார்  ஆய்வகங்களில் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை கட்டணம்வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களின் குறைந்தபட்ச கட்டணத்தை விட பல மடங்குக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தபோது ஆர்.டி. - பி.சி.ஆர் கொரோனா ஆய்வுக்கான  அதிகபட்சக் கட்டணமாக ரூ.4,500 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சில ஆய்வகங்களில் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஆர்.டி. - பி.சி.ஆர் ஆய்வுக் கருவிகள் தாராளமாக கிடைக்கத் தொடங்கிய நிலையில், இந்தியமருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆய்வுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.3,000 ஆகவும், வீடுகளுக்கு வந்து சளி மாதிரி எடுத்துச் செல்ல ரூ.500 கூடுதல் கட்டணமாகவும் நிர்ணயிக்கப் பட்டது.ஆனால், தில்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் ரூ.800 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ரூ.850, உத்தரகண்ட் மாநிலத்தில் ரூ.900 என்ற அளவில் தான்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆந்திரம்மற்றும் கர்நாடகத்தில் ரூ.1,600 மட்டுமேகொரோனா ஆய்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த மாநிலங்களில் கொரோனா ஆய்வை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் கட்டணக் குறைப்பை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.  நாட்டின்அனைத்து மாநிலங்களிலும் இந்தக் கட்டணம்குறைக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழ்நாட்டில்மட்டும் தனியார் ஆய்வு மையங்களில் 6 மாதங்களாக 4 ஆயிரத்திலிருந்து  6 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக இருந்தாலும் அவற்றில் மிகவும் முக்கியமானது கொரோனா ஆய்வு ஆகும். எந்த அளவுக்கு அதிகமாக கொரோனா ஆய்வுகளை நடத்துகிறோமோ,  அந்த அளவுக்கு கொரோனா நோய்பரவலைக் கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 8 கோடி என்றாலும், நேற்றைய நிலவரப்படி 1.18 கோடி பேருக்கு மட்டும் தான் கொரோனா ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  இவர்களில்  90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் இலவசமாக ஆய்வு செய்து கொண்டவர்கள்.  தமிழ்நாட்டில் பெரும்பான்மையினருக்கு கொரோனா ஆய்வு செய்யப்பட்டால் மட்டும் தான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும். அரசு ஆய்வகங்களால் மட்டும் அனைவருக்கும் ஆய்வு செய்ய முடியாது. இதில் தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு முக்கியம்.

தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 221 கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில்  67 ஆய்வகங்கள் மட்டுமே அரசுக்கு சொந்த மானவை. மீதமுள்ள 154 ஆய்வகங்கள் தனியாருக்கு சொந்தமானவை. தனியார்  ஆய்வகங்கள் மூலம் அதிக அளவில்ஆய்வுகள் நடத்தப்பட்டால்,  ஆய்வுகளின் எண்ணிக்கையை அதிகமாக்கி கொரோனாவைரஸ் நோய் பரவலை மிகவும் விரைவாகவும், எளிதாகவும் கட்டுக்குள் கொண்டு வர முடியும். தனியார் ஆய்வகங்களில் மக்கள்அதிக எண்ணிக்கையில் ஆய்வு செய்து கொள்ளவேண்டும் என்றால், அதற்கான ஆய்வுக் கட்டணம் குறைவாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

கொரோனா ஆய்வுக்கான கருவிகளின் விலை தொடக்கத்தில் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது ஓர் ஆய்வுக்கானகருவியின் விலை ரூ.200 ஆக குறைந்து விட்டநிலையில், அதைவிட 15 மடங்கு  கட்டணம் வசூலிப்பது நியாயமல்ல. கொரோனா ஆய்வுக் கட்டணத்தை ரூ.400 ஆக குறைக்க முடியுமா? என்று மத்திய அரசிடமும், தனியார் ஆய்வகங்களிடமும் உச்சநீதிமன்றம் அண்மையில் வினா எழுப்பியுள்ளது.எனவே, பொதுநலன் கருதி தமிழ்நாட்டில் தனியார் ஆய்வகங்களின் கொரோனா ஆய்வுக் கட்டணத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாகவோ அல்லது அதனை காட்டிலும் குறைவாகவோ நிர்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

;