பெண் காவலரை ஆபாச படம் எடுத்தவர் கைது
திருப்பூர், ஜூன் 3 -திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை செல்போன் மூலம் ஆபாசப் படம் எடுத்த மாற்றுத்திறனாளி இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறை தீர்க் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊரக பெண் காவல் படையினருக்கு அருகில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாக செல்போனில் பேசிய படியும், செல்பி எடுப்பது போலவும் நின்றிருந்த அவர், பெண் காவலர்களை மறைவாக புகைப்படம் எடுப்பதை அவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞரிடம் விசாரித்தபோது அவர் தனது செல்போனில் எடுத்திருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக அழிக்கத் துவங்கினார். இதனை கண்ட மற்ற காவலர்கள் அந்த இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்துப் பார்த்ததில் பெண் காவலர்களை அந்த இளைஞர் ஆபாசமாக புகைப்படம் எடுத்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (34) என்பதும், திருப்பூர் கோவில்வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்த காவலர்கள் அவரை கைது செய்துகாவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அட்டைப்பெட்டி குடோனில் தீ விபத்து
பல லட்சம் பொருட்கள் சேதம்
திருப்பூர், ஜூன் 3 -திருப்பூரில் பழைய அட்டை பெட்டி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.திருப்பூர் நெருப்பரிச்சல் பகுதியை சேர்ந்த அசோக் என்பவர் அங்கேரிபாளையம் சாலையில் பழைய எஸ்.பி.அலுவலகம் எதிரில் உள்ள வீதியில் அட்டை பெட்டி குடோன் வைத்திருக்கிறார். பழைய அட்டைப் பெட்டிகளை வாங்கி மறுசுழற்சி செய்து விற்பனை செய்து வருகிறார். இங்கு திங்களன்று மாலை திடீரென தீப் பிடித்து, மளமளவென பரவி கொளுந்து விட்டு எரியத் துவங்கியது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டுதண்ணீர் வாகனங்கள் மூலம் 3 மணி நேரம் போராடி இந்த தீயை அணைத்தனர்.தீயை அணைக்கும் பணியின் இடையே கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனால் தீயணைப்பு வீரர்களும் தீயின் மையப்பகுதிக்கு செல்ல முடியாமல் தீயணைப்பு பணி தாமதமானது. இதையடுத்து ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. வடக்கு தீயணைப்பு நிலையத்தார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு
அவிநாசி, ஜூன் 3-பெருமநல்லூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்கப்பட்டார்.பெருமாநல்லூர், தட்டான்குட்டை கிளாங்காடுப் பகுதியில் வசித்து வருபவர் சுவாமிநாதன்(58). இவர் திங்கட்கிழமை காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக, தனதுவீட்டுற்கு அருகே உள்ள தோட்டத்து கிணற்று ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கால் தவறி 100 அடி கிணற்றுக்குள் சுவாமிநாதன் விழுந்துள்ளார். அதில் 5 அடிக்கும் மேலாக தண்ணீர் இருந்ததால், கூச்சலிட்டவாறு தத்தளித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்த தகவலறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்களை கொண்ட குழுவினர் கிணற்றுக்குள் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு முதியவர் சுவாமிநாதனை உயிருடன் மீட்டனர். இதையடுத்து அவிநாசி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.