tamilnadu

img

கோடை வெயில் நேரத்தில் சுமைப்பணிக்கு தடை விதித்திடுக

திருப்பூர், மே 10–கோடை வெயில் கடுமையாக இருக்கும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சரக்குகளை ஏற்றி, இறக்கும் சுமைப்பணிக்கு தடை விதிக்குமாறு திருப்பூர் மாவட்ட சுமைப்பணித் தொழிலாளர் சங்கம்வலியுறுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்ட சுமைப்பணித் தொழிலாளர் சங்க (சிஐடியு) ஆண்டுப் பேரவை வெள்ளியன்று திருப்பூர் கே.எஸ்.ஆர். மண்டபத்தில் மாவட்டத் தலைவர் சதாசிவம் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணை தலைவர் பிச்சமுத்து தொடக்கி வைத்தார். முன்னதாக சிஐடியு கொடியை திருப்பூர் மாவட்ட சிஐடியு தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ராஜகோபால், பொருளாளர் முருகேசன் ஆகியோர் அறிக்கையை முன்வைத்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் சிறப்புரையாற்றினார். இப்பேரவையில் சுமைப்பணித் தொழிலாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  

தீர்மானங்கள் 

தமிழக அரசு சுமைப்பணித் தொழிலாளர்களுக்குத் தனி நலவாரியம் அமைக்க வேண்டும். ஐஎல்ஓ விதிமுறைப்படி 55 கிலோ எடையுள்ள மூட்டைகள், கார்டூன் பாக்ஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கேரளாவில் உள்ளது போல் அனைத்து ஊழியர்களுக்கும் தினம் ரூ.600 கூலி நிர்ணயித்திட வேண்டும். கோடை வெப்பம் 100 டிகிரிக்கு மேல் உள்ள நிலையில் லாரி, வேன் மற்றும் சரக்குகள் ஏற்றி இறக்கும் பணிக்கு மதியம் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தடைவிதிக்க வேண்டும். அனைத்து சுமைப்பணித் தொழிலாளர்களுக்கும் முதல்வர் காப்பீட்டுத் திட்டம், பிரதமர் ஆயுஷ்மான் காப்பீடு அட்டைகளை அரசே முன்வந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, இப்பேரவையில் சிஐடியுதிருப்பூர் மாவட்ட சுமைப்பணித் தொழிலாளர் சங்கத் தலைவராக ஆர்.சதாசிவம், செயலாளராக எம்.ராஜகோபால், பொருளாளராக எம்.முருகேசன் ஆகியோரும், துணைத் தலைவர்களாக கூட்செட் எஸ்.கனகராஜ், மார்க்கெட் தங்கவேல், அரிசிக்கடை வீதி ஏ.முருகசாமி, துணைச் செயலாளர்களாக கே.உண்ணிகிருஷ்ணன், கிஷோர்குமார், டிரான்ஸ்போர்ட் மணி எம்.நடராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில்,கிஷோர்குமார் நன்றி கூறினார்.