tamilnadu

img

கேரளத்தில் 88 ஹாட் ஸ்பாட்டுகள்....தலைமைச் செயலாளர் அறிவிப்பு

திருவனந்தபுரம்
கேரளத்தில் கொரோனா தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள 88 ஹாட்ஸ்பாட்களை தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் அறிவித்தார். இப்பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் எந்தவித விலக்கும் அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.  

ஹாட்ஸ்பாட்களின் விவரங்களை சுகாதாரத் துறை வெளியிடும். ஆரஞ்சு மற்றும் பசுமை மாவட்டங்களில் உள்ள ஹாட்ஸ்பாட்களில்  கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். ஆரஞ்சு ஏ மாவட்டங்களில் ஏப்ரல் 24 முதல், ஆரஞ்சு பி மாவட்டங்களில் ஏப்ரல் 20 முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். சிவப்பு எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி கேரள அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளி மாநிலங்களிலிருந்து பல்வேறு அனுமதி சீட்டுகளுடன் கேரளத்திற்கு மக்கள் வருகிறார்கள். அவர்களை எந்த மாநில எல்லையிலிருந்தும் கேரளத்திற்குள் அனுமதிக்கவில்லை. ஆனால், ஏற்கனவே உள்ள உத்தரவின்படி கர்ப்பிணிகள், சிகிச்சைக்காக வருவோர், உறவினர் மரண நிகழ்வில் பங்கேற்க வருவோர் அனுமதிக்கப்படுவார்கள். அவசர மருத்துவ சிகிச்சைக்கான வெளிமாநில பயண அனுமதி சீட்டு வழங்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள், இதர சுகாதார ஊழியர்கள், பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் ஆகியோர் சொந்த வாகனங்களில் வெளி மாவட்ட பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அரசு அலுவலகங்களில் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் 50 சதவிகிதம் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மூன்று மற்றும் நான்காம் நிலையில் 33 சதவிகிதம் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். ஏற்கனவே உள்ள உத்தரவின் படி மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டும். இது பசுமை பிரிவின் கீழ் வரும் மாவட்டங்களுக்கும் பொருந்தும். உத்தரவில் கூறப்படாத கடைகள் திறக்க அனுமதி இல்லை எனவும் அவர் கூறினார்.