tamilnadu

img

எங்களிடம் பணம் இல்லை சர்வதேச தொடரை ரத்து செய்த அயர்லாந்து

ஐரோப்பா கண்டத்தின் செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றான அயர்லாந்து நாடு இங்கிலாந்து நாட்டிற்கு அருகிலும், அட்லாண்டிக் கடல் பகுதியிலும் தீவு போன்று உள்ளது. கால்பந்து, ரக்பி, குதிரையேற்றம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் அந்நாட்டு மக்கள் அதிக ஆர்வம் உள்ளவர்களாகச் சுழலுகின்றனர். 13 ஆண்டுகளில் (2006-2019) அசுர வளர்ச்சியைக் கண்டுள்ள அயர்லாந்து அணி திறமையின் அடிப்படையில் கடந்த 2017-ஆம் ஆண்டு (டெஸ்ட்) சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் முழுநேர உறுப்பினர் அந்தஸ்து பெற்றது. டெஸ்ட் அந்தஸ்து பெற்றதும் அயர்லாந்து அணி கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. இதன் பலனாக அடுத்து நடை பெறவிருக்கும் வங்கதேசத்துக்கு (டெஸ்ட் மற்றும் டி-20) எதிரான தொடரையும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 5 டி-20 போட்டிகளையும் (உள்நாட்டு) ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

அயர்லாந்து அணியின் இந்த தகவல் கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கிரிக்கெட் அயர்லாந்து தலைமை செயல் இயக்குநர் வாரன் டியூட்ரம் கூறியதாவது,” ஐசிசி முழு உறுப்பினரான பின்பும் எங்களது வாரியத்தின் நிதி நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மற்ற தொடர்களை விட டெஸ்ட் தொடருக்கான  அணியை தயார்ப்படுத்துவதில் அதிக முதலீடு, நிரந்தர உள்கட்டமைப்பு வசதிகள்  போதிய அளவில் இல்லை. குறிப்பாக ஒரு டெஸ்டை நடத்த 10 லட்சம் யூரோக்கள் (7.8 கோடி ரூபாய்) தேவைப்படும். இதனைத் திரட்ட தற்போது எங்களுக்குச் சக்தியில்லை. இந்த மிகக்குறைவான நிதி ஆதாரம் சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமல்ல உள்நாட்டுத் தொடர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்றார்.  கிரிக்கெட் உலகிற்கு இது புதுமையான செய்தியாக இருப்ப தால் ஐசிசி அயர்லாந்து அணியின் நிலைமை குறித்து விரைவில் ஆராய குழு நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பிரச்சனைக்குக் காரணம்? 

அயர்லாந்து நாடு பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்தும், சாதாரண கிரிக்கெட் தொடர் நடத்தக் கூட பணம் இல்லையா? என்ற கேள்விக்கு ஐசிசி தான் காரணம். ஏனென்றால் முழுநேர அந்தஸ்து கிரிக்கெட் வாரியங்களுக்கு  ஐசிசி நிதியுதவி அளிக்கும்  (தொடருக்கு ஏற்ப). அதாவது டெஸ்ட் தொடருக்கு மட்டும் அதிகபட்ச நிதியுதவியும் மற்ற தொடர்களுக்கு சுமாரான பணமும் அளிக்கும். கிரிக்கெட் விளையாடும் நாடுகள் அனைத்தும் ஐசிசி-யின் நிதியுதவி மூலம் தான் போட்டியை நடத்த முடியும்.அணியை கட்டமைக்க முடியும். அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த நிதியுதவி கிடைத்ததா எனத் தெரியவில்லை. இதுதான் பிரச்சனைக்குக் காரணம். 

இந்த நிலைமை மாறுமா? 

ஐசிசி நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), ஐசிசி-க்கு அதிக பணப்பலன் அளிப்பதால் பிசிசிஐ எதிர்பார்ப்பதை விட அதிக நிதியுதவியை பெறுகிறது. மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களும் ஐசிசி-யின் நிதியில் அதிக பங்குகளைப் பெறுவதால் மற்ற நாடுகள் தேவைக்கு மட்டுமே நிதியை வாங்கிச் செல்கின்றன. கிரிக்கெட் பின்புலம் இல்லாத ஆப்கானிஸ்தான், அயர்லாந்து போன்ற பிற நாடுகள் ஐசிசி-யின் கையை எதிர்பார்த்துச் சோர்ந்து விடுகின்றன. ஏற்கெனவே ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அழிவு நிலைக்குச் சென்றுள்ளதற்கும் ஐசிசி-யின் நிதி பிரச்சனை தான் காரணம். இந்த நிலையில், தற்போது அந்த வரிசையில் அயர்லாந்து அணி நுழைந்துள்ளது.