உலகக்கோப்பை தொடரின் 12-வது சீசன் வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்குகிறது.குரூப் சுற்றில் இடம்பெறட்டுள்ள 10 அணிகள், வீரர்கள் பட்டியலை வெளியிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.கடந்த கால உலகக்கோப்பை தொடர்களில் கோப்பையை கைப்பற்றும் நாடுகளை எளிதாக அடையாளம் கண்டு விடலாம்.ஆனால் 12-வது சீசனில் பலம் வாய்ந்த அணிகள் அதிகமாக இருப்பதால் கோப்பை கைப்பற்றும் அணிகள் கியூவில் நிற்கின்றன. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி மற்றும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகளில் ஏதேனும் ஒன்று உலகக்கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கை, பாகிஸ்தான், நியூஸிலாந்து, விண்டீஸ், வங்கதேசம் ஆகியஅணிகளும் வலுவான பார்முடன் இருப்பதால் பலமான அணி களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் அணி கோப்பை வெல்லாவிட்டாலும் அரையிறுதி வரை முன்னேறி அனுபவ அணியாக வளர துடித்துக் கொண்டிருக்கிறது.
மைதானம் எப்படி?
மிதமான தட்பவெப்ப நிலையைக் கொண்டுள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மைதானங்களில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். இந்திய ஆடுகளங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் 8 மணிநேரம் தொடர்ந்து ஸ்விங் ஆகும். பிட்ச் பகுதியில் புற்கள் மிதமாக இருந்தாலும் பவுன்சர் அதிகமாக எகிறும். சுழற்பந்து வீச்சும் சீரிய திசையில் திரும்பும்.ஷார்ட் பிட்ச் பந்துகள் இடுப்பு அளவிற்கு எகிறும் என்பதால் யார்கர் பந்துகளை கணிப்பது சற்று கடினமாக இருக்கும்.பிட்ச் மையத்தை கணித்தால் நன்கு ரன் குவிக்கலாம்.
இங்கிலாந்து மண்ணில் பழுத்த நாடுகள்
சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி தனிக்காட்டு ராஜாவாக இருந்தாலும், ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடர் மூலம் இங்கிலாந்து ஆடுகளங்களை நன்கு கணித்து வைத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் கூடுதல் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நாடுகளை விட பாகிஸ்தான், இலங்கை, விண்டீஸ் அணிகள் இங்கிலாந்திற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் இந்த அணிகள் சிரமின்றி வெற்றியைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை அணிகள், வீரர்கள் விபரம்...