மத்திய அரசு தகவல்
புதுதில்லி, டிச.15- கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலமாக இஸ்ரோ நிறுவனம் ரூ.1,245 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அணுசக்தி-விண்வெளி அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்து கூறியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் 26 நாடுகளின் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியன் மூலம் இஸ்ரோ ரூ.1,245 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் அந்நிய செலாவணி வருவாயில் ரூ.91.63 கோடி, இஸ்ரோவின் மூலமாக கிடைத்துள்ளது. 2019 ஆம் நிதியாண்டில் இஸ்ரோவின் வருமானம் ரூ.324.19 கோடியாகவும், 2018 ஆம் நிதியாண்டில் ரூ.232.56 கோடியாகவும் இருந்துள்ளது. கடந்த டிசம்பர் 11 அன்று, ரேடார் இமேஜிங் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் RISAT-2BR1-யை பி.எஸ்.எல்.வி ராக்கெட்டைப் பயன்படுத்தி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. பி.எஸ்.எல்.வி இத்துடன் ஒன்பது வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் எடுத்துச் சென்றது. இதுவரை, இந்தியா 1999 ஆம் ஆண்டு முதல் 319 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.