கல்வராயன்மலை, ஜூன் 17- மலை மக்களுக்கு சொந்தமான நிலங்களி லிருந்து விளை பொருட்களை திருடிச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் வசிக்கும் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு சொந்தமான 33 ஏக்கர் பட்டா நிலம் மற்றும் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட அனுபவ தரிசு நிலத்தில் 700க்கும் மேற்பட்ட மாமரங்கள் உள்ளன. இந்த நிலங்கள் தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர் வினோத்கந்தையா மற்றும் அவரது ஆட்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையே சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று இந்நிலங்கள் மலை வாழ் மக்களுக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் வினோத்கந்தையாவின் அடியாட்கள் மலை மக்களின் நிலங்களில் விளைந்த மாங்காய்களை திருட்டுத்தனமாக பறித்து பிக்கப் வாகனத்தில் ஏற்றும் போது (வாகன எண் டிஎன் 29/பிவி-1174) மலை மக்கள் அதை தடுத்துள்ளனர். அப்போது அவர்கள் வீச்சு அறுவாள், கல் போன்ற ஆயுதங்களால் மலை மக்களை தாக்க முயற்சித்துள்ளனர். இதுகுறித்து கரியாலூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா ளர் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, அண்ணாமலை, செயலாளர் செல்வ ராஜ் ஆகியோர் கள்ளக்குறிச்சி காவல்துறை துணைகண்காணிப்பாளரை நேரில் சந்தித்து அத்துமீறி மாங்காய்களை பறித்துச் சென்ற வினோத் கந்தையாவின் அடியாட்கள்மீது திருட்டு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.