tamilnadu

img

கள்ளக்குறிச்சி:  சாலை விபத்தில் துணை ஆட்சியர் உள்ளிட்ட 2 பேர் பலி

கள்ளக்குறிச்சி அருகே  சங்கராபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நடந்த சாலை விபத்தில் சமூக நலத் துறை துணை ஆட்சியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத் துறை துணை ஆட்சியராக பணியாற்றி வந்தவர் திருவாரூர் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே கீழ்பாவதுகுடி, தட்சணகாளி நகரைச் சேர்ந்த சுந்தரம் மனைவி ராஜாமணி( 50). இவர், வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் தனது அலுவலக வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்றபோது ஓட்டுநர் ஃபாரூக்கின்  கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக ஓடியது. அப்போது அங்கு சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது மோதியதுடன், அங்கு விளையாடிக் கொண்டிருந்த கோவிந்தராஜ் மகள் கோபிகா(11) என்பவர் மீதும் மோதியது. இந்த விபத்தில் துணை ஆட்சியர் ராஜாமணி மற்றும் சிறுமி கோபிகா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல்துறையினர்  காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சங்கராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.