கர்நாடாகா முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் உதவியாளர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வராக குமாரசாமி பதவி வகித்தபோது கூட்டணி அரசில் துணை முதல்வர் பதவி வகித்தவர் பரமேஸ்வரா. இவருக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. பரமேஸ்வராவின் உதவியாளர் ரமேஷிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது விசாரணை நடத்தினர். வரி ஏய்ப்பு முறைகேடு புகாரில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியானது.
மேலும் கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜலப்பாவுக்கு சொந்தமான கோலார் மருத்துவக் கல்லூரியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மொத்தம் 25 இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்றன.
இந்த சோதனையில் 5 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது. மருத்துவ கல்லூரிகளில் கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் வெளியான தகவல் அடிப்படையில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது.
இந்தநிலையில் பரமேஸ்வராவின் தனி உதவியாளர் ரமேஷ் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.