tamilnadu

img

15 ஆண்டுகால தினக்கூலிகளை நிரந்தரம் செய்ய மறுப்பு அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர்கள் ஆவேசம்

சிதம்பரம், ஆக. 18- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தினக்கூலி ஊழியர்க ளின் பணிநிரந்தர கோரிக்கையை 15 ஆண்டு காலமாக புறக்கணிக்கப்படுகிறது. இதனால் சிஐடியு தலைமையில் புதிய சங்கத்தை துவக்கினர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தினக்கூலி வேலைக்கு 139 பேர் தேர்வு செய்யப்பட்ட னர். இவர்களில் 80 பேர் பெண்கள். 59 பேர்ஆண்கள். வேலைக்கு சேர்ந்த நாள் முதல் 2012 வரை ஒரு நாளைக்கு ரூ. 40 தினக்கூலியை பெற்று வந்துள்ளனர். குறை வான கூலி பெற்றாலும் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்று தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தை அரசு முழுகட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட போது ரூ.150 கூலி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் 2018 முதல் ரூ. 200 வழங்கி வருகிறார்கள். அரசு விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகள், பணிக்கு வராத நாட்களில் கூலி இல்லை. இவர்களும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் பணி நிரந்த ரம் கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டம் நடத்தியுள்ளனர். அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தும் பல்கலைக்கழக நிர்வாகம் கோரிக்கையை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது. இவர்களின் நியாயமான கோரிக்கைக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ஆதரவு கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.  இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாக பணியாற்றும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடத்தினர். இதில் சிஐடியு  மாவட்டச் செய லாளர் கருப்பையா, சிதம்பரம் ராஜா, சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் சங்கமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து, சிஐடியு தலைமையில் அண்ணாமலை பல்கலைக் கழக தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தனிச் சங்கத்தை துவக்கினர். சங்கத்தின் தலைவராக ராஜா, செயலாளராக வினோத்குமார், பொருளாளராக சுரேஷ் உள்ளிட்ட 15 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றனர். கூட்டத்தில் தினக்கூலி தொழிலாளர் அனைவரையும் பல்கலைக் கழக நிர்வாகம் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.