tamilnadu

img

திருவண்ணாமலை மாவட்டம் சிபிஎம், மலைவாழ் சங்க 7 பேர் ஊராட்சி தலைவர்களாக தேர்வு

திருவண்ணாமலை,டிச.19- திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட 6 ஊராட்சி மன்றங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டி யின்றி தலைவர்களாக  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். பொதுத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  பெண் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு இம் மாதம் 27 மற்றும் 30 அகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டி யிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வியாழனன்று மாலை வெளியிடப்பட்டது.  பல மாவட்டங்களில் பிரச்சாரமும் துவங்கி விட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம்  எறும்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட மஞ்சுளா, தெள்ளார் ஒன்றியம், மழுவங் கரணை ஊராட்சி மன்றத் தலைவருக்கு விஜயா நடராஜன், வந்தவாசி ஒன்றியம் மங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராஜாராம் ஆகியோர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், செய்யார் ஒன்றியம் வடகம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வெங்கடேசன், இருமரம் ஊராட்சி  மன்ற தலைவர் பதவிக்கு மணி, காள சமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு வள்ளியம்மாள் ஆகியோர் மனு செய்திருந்தனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள். இதில் நான்கு பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் இருவர் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத்தொகுதியில் பெண் தேர்வு

ஆரணி ஒன்றியம் முருகமங்கலம் பொதுத் தொகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியை சேர்ந்த வாசுகி  மட்டுமே மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் அவரும் போட்டியின்றி ஊராட்சிமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  திருவண்ணாமலை மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகும். பழங்குடியின  மற்றும் தலித் மக்கள் கணிசமாக வசிக்கும் மாவட்டமாகும். இம் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் இவர்களின் இருப்பிடங்களில் அடிப்படை வசதிகளுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராடி வருகிறது.பழங்குடியின மக்களை திரட்டி நடத்திய போராட்டத்தின் விளை வாக தற்போது 7 ஊராட்சிகளில்  மார்க்சிஸ்ட்  கட்சியை சேர்ந்தவர்களை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மக்கள் பிரதி நிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர்கள் வாழ்த்து

உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு, மாநில பொதுச் செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக் குமார், மூத்த தலைவர் எம்.வீரபத்திரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரி வித்துள்ளனர்.