நமது நாட்டில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் அதிக அளவில் பரவி இருப்பது, குடற்பூச்சி நோய் ஆகும். சுகாதார மற்ற சூழ்நிலை, சுத்தமற்ற வாழ்க்கை முறை போன்றவை காரணமாகக் குழந்தைகளை இக்குடற்பூச்சிகள் பற்றிக் கொண்டு பெரும் துன்பத்தை விளைவிக்கின்றன. எவ்வளவுதான் சத்துள்ள ஆகாரம் சாப்பிட்டாலும், அது உடலோடு சேராமல் வீணாகிறது. குழந்தைகள் நாளுக்கு நாள் மெலிந்து - நலிந்து - வெளுத்து - அழகற்றுப் போகின்றன. நாம் பெற்ற செல்வம் நமக்கே வெறுப்பாகக் காட்சி அளிக்கிறது. இது ஏன்? தூய்மைக் குறைவு காரணமாக இப்பூச்சிகள் குடலுக்குள் சென்று உடலுக்குச் சேர வேண்டிய சத்தையும் இரத்தத்தையும் தாம் உறிஞ்சிவிடுவதால், இது ஏற்படுகிறது. ஆகவே இந்த நோய், குழந்தைகளை அணுகாது செய்ய, நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய தடுப்பு முறைகள் என்ன என்பதை விளக்கிச் சொல்வதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.குடற்பூச்சிகளில் பலவகையுண்டு. அவற்றுள் நாக்குப் பூச்சி, கீரிப்பூச்சி, நாடாப்பூச்சி, சாட்டைப்பூச்சி ஆகியவைதான் நமது நாட்டில் அதிகமாகக் காணப்படும் குடற்பூச்சிகளாகும்.நாக்குப்பூச்சி என்பது மண்புழுவைப் போல் நீளமாக இருக்கும். இதனை ஆங்கிலத்தில் சுடிரனே றுடிசஅ என்பார்கள். இப்பூச்சியின் முட்டைகள் உணவு, தண்ணீர், காற்று ஆகியவற்றின் மூலமும், குழந்தைகள் விரல் சூப்புவதின் காரணமாகவும், குடலுக்குள் செல்கின்றன. அங்கு புழுக்களாக மாறி சுமார் 6 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை வளருகின்றன. இப்புழுக்கள் இடும் முட்டைகள் மலத்தின் வழியாக வெளியே வரும். திறந்த வெளிகளிலும் தெரு ஓரங்களிலும், அசுத்தமான கழிவறைகளிலும் மலம் கழிப்பதன் காரணமாக இப்பூச்சிகளின் முட்டைகள் குடலுக்குள் போய்ச் சேருகின்றன.
குழந்தையின் வயிற்றில் இப்பூச்சி இருந்தால் வயிற்று வலி, பசியின்மை, எடைக்குறைவு, இருமல், சளி ஆகியவை ஏற்படும். சில சமயங்களில் வாந்தி, பேதி உண்டாகலாம். குழந்தை மண்ணை விரும்பி உண்ணும். உடம்பு இளைத்து வயிறு பெரிதாகிவிடும். ஆஸ்துமா போன்ற இரைப்பு வரும். புழு அதிகமானால் குடல் அடைப்பு ஏற்பட்டு மலம் கழிப்பது முடியாமல் போகலாம். இப்பூச்சிகள் சில சமயங்களில் குழந்தையின் வாய் வழியாகவோ அல்லது மூக்கு வழியாகவோ வந்து பெற்றோர்களை அச்சுறுத்தும்.சுத்தமான கழிவறைகளில் மலம் கழிப்பது, மலம் கழித்த பிறகு கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவுவது, சாப்பிடுவதற்கு முன்னர் கைகளை நன்கு சுத்தம் செய்வது, தண்ணீரைச் சுட வைத்துக் குடிப்பது, நகங்களை வெட்டிக் கொள்வது, பச்சைக் காய்கனிகளைச் சுத்தம் செய்வது சாப்பிடுவது ஆகியவை இதற்குப் பொதுவான தடுப்பு முறைகளாகும். இந்தப் பூச்சிக்கு மருத்துவர்கள் வயதுக்குத் தக்கபடி ‘பிப்ரசின்’ என்ற மருந்தைக் கொடுப்பார்கள்.
கீரிப்பூச்சி
இப்பூச்சி வெண்மையாக சுமார் 1/2 அங்குல நீளத்தில் இருக்கும். இதை ஆங்கிலத்தில் Thread Worm என்பார்கள் இப்பூச்சி இரவு நேரத்தில் குடலை விட்டு ஆசனவாய் வழியாக வெளியே வரும். அங்குள்ள தோலில் இடுக்குகளில் ஆயிரக்கணக்கான முட்டைகளை இடும். இப்பூச்சி முட்டை இடுவதற்காகத் தோலைக் குடைவதால் நமைச்சலும், குறுகுறுப்பும் ஏற்படும். இந்த நமைச்சலுக்காக சொரிவதனால் நக இடுக்குகளில் ஒட்டிக் கொண்டு இந்த முட்டைகள் மீண்டும் குடலுக்குள் சென்றுவிடும். குடலுக்குள் சென்ற முட்டை 3 வாரத்தில் பூச்சியை உண்டாக்கிவிடும்.
இதற்கு தடுப்பு முறையாகக் குழந்தைகளின் நகங்களை வெட்டிவிட வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னர் கைகளைச் சோப்பு போட்டுச் சுத்தமாகக் கழுவ வேண்டும். இப்பூச்சியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் உடைகள், படுக்கை விரிப்புகள், பாய்கள் முதலியவற்றைக் கொதி நீரால் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். தூங்கும்பொழுது தனியாகத் தூங்க வேண்டும். ஏனென்றால் வீட்டில் ஒரு குழந்தையிடம் இப்பூச்சி காணப்பட்டால் மற்றவர்களுக்கும் தொற்றிவிடக்கூடும். ஆகவே ஒரு குழந்தைக்கு இப்பூச்சி இருக்கிறது என்று அறிந்தால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் மலப் பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோயை அறவே ஒழிக்க முடியும். இந்நோய் கண்ட குழந்தைகளுக்கு வயிற்று வலி, தூங்கும்போது சிறுநீர் கழித்தல், வலிப்பு ஆசனவாய் நமைச்சல், தூக்கமின்மை, இருமல் ஆகியவை தோன்றும். இப்பூச்சி பெண்களுக்கு இருந்தால் ஆசனவாயில் நமைச்சலை உண்டுபண்ணுவதோடு அல்லாமல் அவர்களுடைய பிறப்பு உறுப்புகளிலும் நமைச்சலை ஏற்படுத்தும்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்தை கொடுக்க வேண்டும்.
கொக்கிப்பூச்சி (Hook Worm) என்ற இதனை ஆங்கிலத்தில் கூறுவார்கள். கொக்கிப் பூச்சிகளுக்குப் பற்கள் உண்டு. இதன் உதவியால் குடற் சுவர்களைப் பற்றிக் கொண்டு இரத்தத்தை உறிஞ்சும். இதன் காரணமாக வயிற்றுவலி, வயிறு வீங்குதல், வயிற்றுப்போக்கு, இரத்தச்சோவை ஆகியவை ஏற்படும்.
இப்பூச்சி, கால்களில் உள்ள இடுக்குகளின் வழியாக இரத்தக்குழாயை அடைந்து, பின்னர் உடலுக்குள் செல்கிறது. நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் செருப்புப் போடாமல் நடப்பதாலும், வயல் வெளியில் வேலை செய்வதாலும் இப்பூச்சிகள் எளிதாகப் பற்றிக் கொள்கின்றன. இது விவசாய மக்களிடமே அதிக அளவில் காணப்படுகிறது.இப்பூச்சி தொற்றிய நோயாளியின் மலத்தில் 4,000,000 முட்டைகள் வெளியேறும் என்று அறியும்பொழுது நமக்கு இந்த பூச்சி விளைவிக்கும் கேடுகளை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இம்முட்டைகள் ஈரமான நிலத்தில்தான் உயிர் வாழ முடியும். இம்முட்டைகள் சிறு பூச்சிகளாக ஆன 5 நாட்களுக்குப் பிறகு மரநிழல்களில் உள்ள புல், செடிகளில் தங்கி இருக்கும். இச்சிறு பூச்சிகள் மயிர்க்கால்களிலும், வியர்வைச் சுரப்பி உள்ள இடங்களிலும் பொதுவாக ஊர்ந்து சென்று தங்கும். அப்பொழுது அங்கு அரிப்பையும் அழற்சியையும் ஏற்படுத்தும். பிறகு நிணநீர் வழியாக இரத்தக்குழாயை அடைந்து அங்கிருந்து நுரையீரலை அடையும். அங்கிருந்து சிறுகுடலை அடைகிறது.இப்பூச்சிகள் குடலில் உள்ள சளிப்படலத்தை கவ்விக் கொண்டு இரத்தத்தை உறிக்கும். அப்பொழுதுதான் நோயாளிக்கு, இரத்த சோகை சில நாளும், சில நாள் பேதியும் உண்டாகும். நோய் முற்றிய நிலையில் காலில் வீக்கம், படபடப்பு ஆகியவை தோன்றும். நாக்கு பிளாட்டிங் பேப்பர் போல் வெள்ளை வெளேரென்று போய், உடலே வெளுத்துவிடும்.
தொடரும்...