லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டிக்கொடுப்பட்ட கழிப்பறை களில் மகாத்மா காந்தி, அசோகச் சக்கரம் மற்றும் தமிழக அரசின் சின்னமான திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் ஒட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தர்ஷா பகுதியில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் 508 கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் இச்சாவளி என்ற கிராமத்தில் கட்டப் பட்டுள்ள 13 கழிப்பறைகளில்தான், மகாத்மா காந்தி,தேசியக்கொடியில் உள்ள தேசிய சின்னமான அசோகச் சக்கரம் மற்றும் தமிழக அரசின் சின்னமான திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் ஆகியவை பொறிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கவே, தற்போது இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கிராம வளர்ச்சித்துறை அதிகாரி சந்தோஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், காந்தியின் படம் பொறிக்கப்பட்ட டைல்ஸ் கற்களை கழிப்பறையில் ஒட்டிய அரசு அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முன்பு, பாஜக ஆட்சி நடந்தபோது, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் படம் பொறிக்கப்பட்ட டைஸ்ஸ் கற்கள் ஒட்டப்பட்டன.
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான விளம்பரமாக இவ்வாறு செய்தார்கள். ஆனால், அம்மாநில உயர்நீதிமன்றம் தலையிட்டு மோடி, சவுகான் படம் பொறிக்கப்பட்ட டைல்ஸ் கற்களை அகற்ற உத்தரவிட்டது. மோடி, சவுகான் படங்களாவது வீடுகளில் ஒட்டப்பட்டன. ஆனால், காந்தி, தேசியச் சின்னம் மற்றும் தமிழக அரசின் சின்னங்கள் ஒட்டப்பட்டது, அவமதிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செய்யப்பட்டதாகவே தெரிகிறது.