அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றுவோம் என்று பாஜக அமைச்சர் ரகுராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து பேசிய பாஜக அமைச்சர் ரகுராஜ் சிங், தேச விரோத செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நாயைப் போன்ற மரணம்தான் அளிக்கப்படும் என்றும், நாங்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பெயரை, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் என்று மாற்றிவிட முடியும் என்றும், என்கவுண்டரில் இதுபோன்றவர்களை உடனடியாகக் கொல்லுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின்போது மோடிக்கு எதிராகவோ, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவோ கோஷங்களை எழுப்பினால் உயிரோடு புதைத்துவிடுவேன் என்று ஏற்கெனவே இவர் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.