நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த சுஜி என்ற காசி. இவர் 80க்கும்மேற்பட்ட பெண்கள், பள்ளி மாணவிகளை திட்டமிட்டு ஏமாற்றி, வன்புணர்வு செய்து, அவற்றை பதிவு செய்ததோடு சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இது குறித்த பல வழக்குகள் குமரி மாவட்ட காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தற்போது அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு வசதியாக இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே 26 செவ்வாயன்று 50 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மற்றும் என்.முருகேசன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.