tamilnadu

img

பஞ்சாப்-ஹரியானா உயர் நீதி மன்ற தீர்ப்பு: மறுபரிசீலனை தேவை

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி கோரிக்கை

புதுதில்லி, ஜூன் 4- பஞ்சாப்-ஹரியானா உயர்நீதி மன்றம் மே 14 அன்று அளித்த தீர்ப்பு மிகுந்த கவலை அளிப்பதாகும்.  தொலைபேசி மூலம் சாதி ரீதியாக இழிவு செய்யப்படுவது எஸ்.சி, எஸ்.டி  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என அத் தீர்ப்பு கூறியுள்ளது.  இத் தீர்ப்பின் அர்த்தம் எந்த அளவுக்கு நீளுமெனில், மூன்றாம் மனிதர் இருப்பு இல்லாத இடங்களில் அரங்கேற்றப்படும் சாதிய இழிவுகளும் சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்றாகி விடும். அவர்கள் மீது நடவடிக்கை இருக்காது. 

நீதி முறைமையின் பல மட்டங்களில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பெரிதும் நீர்க்க செய்கிற முயற்சிகள் உள்ள நிலையில் இந்த அண்மைய தீர்ப்பு தலித் மக்களின் மனதில்  பாதுகாப்பற்ற உணர்வை அதிகரித்துள்ளது.  இத் தீர்ப்பு மறு பரிசீலனை செய்யப்பட்டு சட்டம் நீர்க்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி (டி.எஸ்.எஸ்.எம்) வலியுறுத்துகிறது. 

வழக்கின் விவரம்

ஒரு தலித் பஞ்சாயத்து தலைவரை இரண்டு பேர் தொலைபேசியில் சாதி ரீதியாக இழிவு செய்து திட்டினார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை நீதிமன்றமும் துவக்க நிலை ஆதாரங்கள் இருப்பதாக முடிவு செய்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டது. இதற்கு எதிரான மேல் முறையீட்டு மனு உயர் நீதி மன்றத்திற்கு சென்றது.  உயர் நீதி மன்றத்தில் நீதிபதி ஹர்நரேஷ் கில் தீர்ப்பில் “இந்த குற்றச்சாட்டில் தொலைபேசியில் தீட்டியதாகவும், மூன்றாம் நபர் யாரின் முன்பும் நடைபெறாததாலும் இதை பொது இடத்தில் உள் நோக்கத்துடன் நடந்ததாக கருதுவதற்கு இடமில்லை. அதற்கான ஆவணங்களும் இல்லை”  என்று கூறி விசாரணை நீதிமன்றத்தின் ஆணையை ரத்து செய்துள்ளது.